திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்

சிவபெருமானின் இருதயமாக விளங்கும் தலம்

ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலமான வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இத்தலத்தை கோடி ருத்ரர்கள் (சிவனடியார்கள்) பூஜித்ததால், 'ருத்ர கோடி தலம்' என்ற பெயர் பெற்றது. இறைவன் ருத்திர கோடீஸ்வரர் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தருளி இருக்கின்றார். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட வைப்பு தலம் இது. இந்த பெரிய கோவிலில் ஒன்பது முக வில்வ விருட்சம் மற்றும் உருத்திராட்ச விருட்சமும் உள்ளன.

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். இக்கோவில் உட்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால கவிதையில், காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இக்கோவிலின் தனிச்சிறப்பு நமக்கு விளங்குகின்றது.

ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார். கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

"ருத்திர கோட்டீஸ்வரர்" என ஒரு முறை கூறும்போதே பாவம் விலகும், புன்னியம் உண்டாகும். ருத்திர கோட்டீஸ்வரரை வழிபட்டால் பலன் கோடியாக பெருகும். நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். பிரதோஷ காலங்களில் இறைவனை திருநந்தி தேவரும் பெருஞ்சிறப்புடன் வழிபடும் தலம். சித்தர்கள் வழிபடும் பெருமை மிக்க தலம். மூன்று பிரதோஷ காலங்களில் வழிபட்டால் பிள்ளை பேறு நல்கும் பெரும்பதி இது.

கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

Read More
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

ஆதிசேஷன் இழந்த தன் பலத்தை மீண்டும் பெற்ற தலம்

ஆதிசேஷன் சிவராத்திரி அன்று வழிபட்ட தலங்கள்

கும்பகோணம் நகரத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலம் நாகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி அம்மன். இத்தலம் தெற்கு திசையில் உள்ளதால் ‘கீழ்க்கோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள நாகர் கோவில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இத்தலம் நாக தோஷ பரிகாரத் தலமாகும். சூரியன் வழிபட்டதால் 'பாஸ்கரஷேத்திரம்' என்றும், பிரளய காலத்தில் வில்வம் விழுந்த இடம் என்பதால் 'வில்வ வனம்' என்றும் அழைக்கப்படுகிறது.

நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக் கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக் கேட்ட சிவபெருமான், ஆதிசேஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசேஷன் பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.

ஒரு சிவராத்திரியில் ஆதிசேஷன், முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு ஆதிசேஷனுக்கு, பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் நாகேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிறையணியம்மன்.இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம் . கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. இறைவன் திருநாமம் சேசபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி .

நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் நாகவல்லி.

இந்த நான்கு தலங்களும் சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள் என்பதால், சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும், சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நாக தோஷம் நீங்கும்.

Read More
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்

லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.

பொதுவாக சிவாலயங்களில், கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் சிவபெருமான் லிங்கோத்பவராக, அக்னி பிழம்பிலிருந்து வெளிப்படும் உருவமாக, எழுந்தருளி இருப்பார். இது சிவபெருமானின் 25 மூர்த்தங்களில் ஒன்றாகும். லிங்கோத்பவர் என்பது சிவபெருமான் ஆதி அந்தம் (தொடக்கமும் முடிவும்) இல்லாத அக்னி தூணாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய காட்சியை உணர்த்தும் ஒரு சிறப்பு வடிவமாகும்.

லிங்கோத்பவர் மூர்த்தத்தின் புராண பின்னணி

ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவருக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான நெருப்புத் தூண் தோன்றியது. இருவரும் அதன் அடியையும் முடியையும் தேடி கிளம்பினார்கள். தூணின் அடியைக் காண வராஹமாக (பன்றி) விஷ்ணுவும், முடியைக் காண அன்னமாக பிரம்மாவும் சென்றனர். இருவராலும் காண முடியவில்லை.அந்த நெருப்புத் தூணின் நடுவிலிருந்து சிவபெருமான், தலை, கை, கால்களுடன் வெளிப்பட்டார். இதுவே லிங்கோத்பவர் (லிங்கத்திலிருந்து உதித்தவர்) எனப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையில் எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், லிங்கோத்பவர் சிற்பத்தின் மேல்பகுதியில் பிரம்மா அன்னமாகவும், கீழ்ப்பகுதியில் பன்றியாக விஷ்ணுவும், லிங்கத்திற்கு நடுவில் சிவபெருமானும் காட்சி தருவார்கள்.

ஆனால் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில், கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு

மகா சிவராத்திரி அன்று இரவு லிங்கோத்பவ காலத்தில் (நடுநிசி) சிவனை லிங்கோத்பவராக வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. லிங்கோத்பவர் வழிபாட்டின் மூலம் அஞ்ஞானம் அகன்று, ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்

மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.

வான்மீகி மகரிஷி புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதால் இத்திருத்தலத்திற்கு திருப்புத்தூர் என்ற பெயர் வந்தது.

சிவபெருமான் ஆடும் தாண்டவத்தில் ஏழு வகைகள் உண்டு. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியதாண்டவம், காளிகா தாண்டவம், திருப்புரத் தாண்டவம், கெளரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், மற்றும் உமைத் தாண்டவம் ஆகியவை ஆகும். சிவபெருமானின் கௌரி தாண்டவத்தை காண விரும்பிய திருமாலின் துணைவி மகாலட்சுமி கீழ் திசை ஈசனை நோக்கிக் கடுந்தவமிருந்தாள் அவள் முன் சிவபெருமான் தோன்றி கௌரித் தாண்டவம் ஆடிய ஆலயமாகும். ஆதலின் திரு வழிபட்ட ஆலயம் என்னும் பொருள்பட திருத்தளிநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது

இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.

இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.

நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நடனத்திற்கு அதிபதியான நடராஜர்

பரதநாட்டியத்தின் 108 கரணச் சிற்பங்கள்

நடராஜர் என்றால் 'நடனக்கலைகளின் அரசன்' அல்லது 'ஆடலரசன்' என்று பொருள். இது 'நடா' (நடனம்) மற்றும் 'ராஜா' (அரசன்) ஆகிய இரு சமஸ்கிருத வார்த்தைகளின் சேர்க்கையால் உருவானது. இது சிவபெருமானின் நடன வடிவம் (ஆனந்த தாண்டவம்) ஆகும். சிவபெருமானது இந்த நடனம் ஆனந்தத்தின் அடையாளமாகவும், அகங்காரத்தை அழித்து முக்தி தரும் வடிவமாகவும் வழிபடப்படுகிறது.

நடனத்திற்கு அதிபதியான நடராஜர் எழுந்தருளி இருக்கும் தேவாரத் தலமான சிதம்பரம் கோவிலில், பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 20 சிற்பங்களும் உள்ளன. இந்த நாட்டிய சிற்பங்கள் அந்த கால சிற்பிகளின் நாட்டிய அறிவையும், சிற்பக்கலை திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பரதநாட்டியத்தில் கை, கால், உடல் அசைவுகளின் ஒருங்கிணைந்த இசைவு 'கரணம்' எனப்படும். 'கரன்' என்றால் கை, 'அண்' என்றால் அசைவு எனப் பொருள்படும், உடல் உறுப்புகளால் செய்யப்படும் செய்கையே கரணம். இது கை முத்திரைகள் (ஹஸ்தங்கள்), கால் அசைவுகள் (சாரிகள்), மற்றும் உடல் நிலை (ஸ்தானகம்) ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த, முழுமையான இயக்கமாகும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, சிவபெருமானால் அருளப்பட்ட மொத்தம் 108 கரணங்கள் தாண்டவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கரணங்கள் நாட்டியத்திற்கு அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும் முக்கிய அங்கங்களாகும்.

பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 வகை கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பழமையான கோயில்களில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

Read More
கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்

அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி தரும் தனிச்சிறப்பு

குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்க அருளும் லட்சுமி நாராயணர்

கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், துடியலூரை அடுத்து அமைந்துள்ளது வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் விஸ்வநாயகி. இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூன்று யுகங்களைக் கண்ட பெருமை வாய்ந்த கோவில் இது.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பசியால் தளர்ந்து இக்கோவிலுக்கு வந்தபோது, இறைவனும் இறைவியும் வேடுவ தம்பதிகளாகத் தோன்றி அவருக்கு 'வன முருங்கைக்கீரை' சமைத்து அமுது படைத்தனர். விருந்தளித்த காரணத்தால் இத்தல இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் தனித்துவமான சிறப்பு அம்சங்களில் ஒன்று, நிபந்தனையற்ற பக்தியும் மற்றும் சேவையில் ஈடுபடும் சிறிய திருவடி, பெரிய திருவடி என அழைக்கப்படும் அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும். இக்கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் சன்னதிக்கு அருகே இவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்கவும் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.

இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.

இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.

கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோன்று சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

Read More
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்

சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநள்ளாறு. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழும்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.

பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெற்று விளங்குகிறது.

பிரார்த்தனை

இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சனி காயத்ரி மந்திரம் :

காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.

பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.

Read More
திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.

பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Read More
வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்

சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.

Read More
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.

பிரார்த்தனை

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Read More
தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோவில்

தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர் கோவில்

ராமர் வழிபட்ட தீர்த்தாண்டதானம்

தை மாத அமாவாசையில் திதி கொடுத்தால் நற்பலன்களை தரும் தலம்

இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் திருநாமம் சகல தீர்த்தமுடையவர்.இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத் தீர்த்தமான கடலில் நீராடி, பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது இவ்விடத்தில் சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். ராமரும் மகிழ்ச்சியுடன் அந்த நீரை அருந்தினார். தீர்த்தாண்டதானத்தில் ராமர் இருப்பதையறிந்து அங்கு வந்த அகத்தியர், 'ராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானின் அருள் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம். சிவபெருமானை வணங்கிய பின்னர் இலங்கைக்கு செல்லுங்கள்' என்று தெரிவித்தார். இதனையடுத்து அருகே உள்ள திருப்புனல்வாசலில் வீற்றிருக்கும் விருத்தபுரீஸ்வரரை நினைத்து ராமர் வழிபட்டார்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான் ராமர் முன்பு தோன்றினார். பின்னர் ராமருக்கு அருள் புரிந்த சிவபெருமான், அருகிலுள்ள கடற்கரையில், தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்து விட்டு இலங்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வருணபகவான், 'ராமர் வழிபட்ட இடத்தில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்க வேண்டும், ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் விளங்க வேண்டும். அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனை பெற வேண்டும்' என்று வரமளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் அப்பகுதியில் சர்வதீர்த்தேஸ்வரராக கோவில் கொண்டார் என்பது புராணம்.

ராமர் தர்ப்பணம் செய்த கடற்கரையில் பக்தர்கள் இன்றும் தர்ப்பணம் செய்துவிட்டு, ஈரத்துணியுடன் சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். பூர்வ ஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தை மாத அமாவாசையில் இங்கு திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும். இங்கு திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களது ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம்.

Read More
கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்

கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.

இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.

Read More
பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

பிரமனூர் கைலாசநாத சுவாமி கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்

மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.

பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.

மகர சங்கராந்தி

சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில்

தென்காசி காசி விசுவநாதர் கோவில்

ஒரே கோவிலில் இரண்டு நவக்கிரகங்கள் அமைப்பு இருக்கும் அபூர்வ காட்சி

தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை. ஆயிரம் ஆண்டுகள் மேல் பழமையானது இக்கோவில்.

பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் அவரவர் திசையை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார்கள். அரிதாக சில கோவில்களில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைந்து இருப்பார்கள். ஆனால், தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள், மண்டபத்தில் அவரவர் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி ஒரே கோவிலில் நவக்கிரகங்கள் இரண்டு விதமாக அமைந்திருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More
சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில்

அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.

5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.

மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சாதாரணமாக வெண்ணெய்தான் நெய்யாக உருகுவது இயற்கை. ஆனால் இக்கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

Read More
கீவளூர் கேடிலியப்பர் கோவில்

கீவளூர் கேடிலியப்பர் கோவில்

தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.

தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.

நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி

ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.

அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்கப்படும் திருவண்ணாமலை மகாதீப முதல் மை

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம், சிவன் அக்னி பிழம்பாக நின்றதை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் பெரும் தீபமாகும். இது திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாய் சிவன் காட்சியளித்ததைச் சிறப்பிக்கிறது,

ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றவர்கள் பர்வதராஜ குலத்தினர். இந்தப் பர்வத ராஜ குலத்தினரே மகாதீபம் அணைந்த பின் தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கி கோவில் வசம் ஒப்படைப்பார்கள். இந்தக் கொப்பரையில் இருந்து எடுக்கப்படும் முதல் மை, வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கும், மலையப்ப சுவாமிக்கும் திருஷ்டி பொட்டாக வைக்கப்படுகின்றது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று திருவண்ணாமலை நடராஜப் பெருமானுக்கும் சாற்றப்படுகின்றது.

Read More