
நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும் விசேடமான திருமாங்கல்யச் சரடு உற்சவம்
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது. இந்தத் தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். தூண் வடிவில் உள்ள கருவறையில், மூலவர் லட்சுமி நரசிம்மர், ஐந்தடி உயரத் திருமேனியுடன், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும், திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேடமானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் தாயாருக்கு சாற்றப்பட்டு, பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
அமெரிக்க ஆஞ்சநேயர்
இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு ‘அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கித் தருகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்
பெருமாளுக்கு புதுமையான திருநாமம் உடைய தலம்
பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் மகிழ்ச்சி இருமடங்காகும் தலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குரு ஸ்தலமான ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்.
கருவறையில், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து பெருமாளின் திருநாமம் வேறு எந்த தலத்திலும் இல்லாத புதுமையான ஒன்று. இத்தலத்து பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் இந்த திருநாமத்துக்கு பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. ராவணன் சீதையை கடத்தி சென்றபோது, தன் கணவனுக்கு தான் சென்ற வழி தெரிய வேண்டும் என்று சீதாதேவி, தான் அணிந்திருந்த அணிகலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். சீதையைத் தேடி புறப்பட்ட ராமனும் லட்சுமணனும் சீதா தேவி கழற்றி எறிந்த அணிகலங்களை ஆங்காங்கே தரையில் கண்டன்ர். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை, ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது. வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்
திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை.பெருமாளுக்கு இருக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமானது ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதம்
முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும் படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.
அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும். ஏகாதசி விரதம், பாவங்களை போக்குவதுடன் மோட்சத்தை தரக் கூடியது. வாழ்நாள் முழுவதும் ஏகாதசி விரதம் இருப்பவருக்கு மறுபிறவி கிடையாது. தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தினை அவர்கள் பெறுவார்கள். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி உற்சவம்
பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்கத் தோன்றிய மது - கைடபர் ஆகிய அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுத்தனர். அவர்களை அழிக்க விஷ்ணு ஒரு மாதம் தொடர்ந்து போரிட்டார். பின்பு அவர்களை சம்ஹாரம் செய்தார். ஆனால் அவர்கள் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் காரணமாக வைகுண்டப் பதவியை அடைந்தனர். அப்படி அவர்கள் பரம பத வாசலை அடைந்தநாள் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி. அன்று பெருமாள் அவர்களுக்காக வைகுண்ட வாசலைத் திறந்தருளினார். பெருமாளைச் சரணடைந்த அசுரர்கள், 'தங்களுக்கு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியது போல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும் வேண்டிக்கொண்டனர். பெருமாளும் அதற்கு இசைந்தார். அந்த ஏகாதசி திதியே வைகுண்ட ஏகாதசி எனப் போற்றப்படுகிறது.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களையும் நீக்கக் கூடியது. வைகுண்ட ஏகாதசி அன்று இறப்பவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர்.

சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
பெருமாள் கோவில் என்றால் அங்கு பொதுவாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் சொர்க்கவாசலே இல்லாத பெருமாள் கோவில்கள் பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறாது. அப்படிப்பட்ட சில பெருமாள் கோவில்களின் விவரங்களை இந்த பதிவில் நாம் காணலாம்.
1. 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றான கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில், பெருமாள் நேரடியாக வைகுண்டத்தில் இருந்து மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணம் முடிப்பதற்காக வந்ததாக ஐதீகம். வைகுண்டத்தில் தான் எழுந்தருளி இருக்கும் ரதத்துடனேயே வந்து காட்சி தருவதால், இவரை வணங்கினாலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்பதால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
2. காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் என்னும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இந்த ஆலத்தில் மூலவர் பெயரே வைகுண்டப் பெருமாள் என்பது தான். இந்த பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு. இவரை தரிசித்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
3. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் நித்ய சொர்க்கவாசல் தலமாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளும் போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது போது மணியால் ஆன கதவுகள் திறக்கப்படும்.
4. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜபெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோவில் பூலோகத்து விண்ணகரம் என்பதால் இந்த கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இந்த கோவிலே பரமபதமாக கருதப்படுவதால், மற்ற பெருமாள் கோவில்களைப் போல் இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
5. திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. ஸ்ரீதேவியை மணம் முடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக இங்கு வந்த விட்டதால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக கருதப்படுகிறது. இவரை வணங்கினால் முக்தி கிடைக்கும். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலைப் போன்று இங்கும் தட்சிணாயன வாசல், உத்திராயண வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளது.
காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சிபுரம் பவள வண்ண பெருமாள், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் சொர்க்கவாசல் இல்லை.

சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
குழந்தை வடிவில் பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்யதேசம் சிறுபுலியூர். மூலவர் பெயர் தலசயனப் பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள். சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர்(புலிக்கால் முனிவர்), திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலம் ஸ்ரீரங்கம், மற்றொன்று திருச்சிறுப்புலியூர். ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார். கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால், பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதி உள்ளது.
மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்
மூல நட்சத்திர நாட்களில் வழிபட்டால் படிப்பில் தடை, திருமணத் தடை ஆகியவற்றை தகர்த்தெறியும் மூலை அனுமார்
ஆஞ்சநேயர் குழந்தையாக தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வ சிற்பம்
தஞ்சை பெரியகோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், மேல வீதியும் வடக்கு ராஜ வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது, பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில், அவரால் இக்கோவில் கட்டப்பட்டது. கோவில் அமைந்த மேல வீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் இடம், வடமேற்கு வாயுமூலை ஆகும். வாயுவின் மைந்தன் அனுமன், வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்று சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் மன்னன் பிரதாபசிம்மன், பிரதாப வீரஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானான். எனவேதான் இவருக்கு பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது, இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான், பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோவில் அருகிலேயே கோவில் அமைக்கும்படி ஆணையிட்டார்.
படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை, மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோவிலை வலம் வந்தால், குறைகள் விலகி நலம் பயக்கும்.
18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து, மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும்.
இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்று 18 அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்து எடுத்து வந்த மஞ்சள் பூசிய தேங்காயை, கோவில் உட்பிரகாரத்தில் தீபமேற்றி வழிபடும் இடத்தில் உள்ள அனுக்கிரக ஆஞ்சநேயர் முன் வேண்டி சிதறு தேங்காய் எறிந்து பிரார்த்தனை காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி வழிபாடு செய்தால், எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் ஆகியவற்றை இவர் நீக்குகிறார்.
ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ளது. இது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வ சிற்பமாகும்.
இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)
பெருமாள் சங்கு, சக்கரத்தினை கை மாற்றி ஏந்தி இருக்கும் அபூர்வ காட்சி
பெருமாளின் பின்புறம் தசாவதார மூர்த்திகள் இருக்கும் அரிய காட்சி
கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது சரநாராயணப்பெருமாள் கோவில். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது.
இக்கோவில் மூலவர் சரநாராயணப் பெருமாள். சிரித்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் வலதுகையில் சக்கரத்தையும் இடது கையில் சங்கையும் ஏந்திருப்பார். ஆனால் இத்தல பெருமாள், சற்று வித்தியாசமாக, வலது கையில் சங்கையும், இடது கையில் சக்கரத்தையும் ஏந்தி காட்சி தருகிறார்.
சன்னதியில் சரநாராயண பெருமாளின் பின்புறம், மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலை தசாவதாரக் கோவில் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவில் கடக ராசிக்காரர்களுக்கு உரிய கோவிலாகவும், நவக்கிரக பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலை வழிபடுவது மிகவும் சிறந்தது.

தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
கண் கொடுத்த கோதண்டராமர்
தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும் தலம்
மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில்..
முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது.
ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். ஸ்ரீசீதா, லட்சுமண, பரத, சத்ருகன, அனுமன் சமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி அருள்பாலித்து வருகிறார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.
முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்' என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப்பெரிய இந்த மணியின் ஒலி அக்கம்பக்கத்து ஆறு ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்
பிரமாண்ட திருமேனியுடன் நம்மை நேர்பார்வை கொண்டு ஆசீர்வதிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலுக்கு 'ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இக்கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பமாக, ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார்.
ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் வால், ஆஞ்சநேயரின் தலைப்பகுதிக்குப் பின்புறம் இடப்புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஜெயமங்கள ஆஞ்சநேயரை புத்திரப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கைசிக ஏகாதசி டிசம்பர் 11-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்
இருவேறு திசை நோக்கி அருள் பார்வை புரியும் அபூர்வ ஆஞ்சநேயர்
கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமைதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில். 750 வருட பழமை வாய்ந்த சிறப்புமிக்க ராமாயண காலத்தின் வரலாற்று பெருமை கொண்ட கோவில் இது. ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது, ராவத்தநல்லூரில், சஞ்சீவி மலையின் ஒரு சில பகுதிகள் கீழே விழுந்தன.
மூலவர் சஞ்சீவராய ஆஞ்சநேயர், 11 அடி உயரத் திருமேனியுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது இடது கண் கிழக்கு திசை நோக்கியும், வலது கண் மேற்கு திசை நோக்கியும் அருள் பார்வை புரிவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவேறு திசை நோக்கி ஆஞ்சநேயரின் அருட்பார்வை இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலில் பிரதி ஞாயிறு தோறும், எமகண்ட நேரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறுகின்றது. இந்தக் கோவிலில் எமகண்ட நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும். வெண்ணெய் சாற்றினால் மழலைச் செல்வம் கிடைக்கும்.

தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த நரசிம்மர்
நரசிம்மரின் இடது கை அக்வான முத்திரையில் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்) இருக்கும் தனிச்சிறப்பு
கரூர் நகரிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் அமைந்துள்ளது கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கமலவல்லித் தாயார்.
மூலவர் 'உக்கிர நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் (பக்தர்களை அழைக்கும் வண்ணம்), வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
இரணியகசிபுவை வதம் செய்த பிறகு நரசிம்மர் உக்கிரம் தணியாமல் காடு, மேடு, மலைகளில் சுற்றித் திரிந்தார். அவரை சாந்தபடுத்த தேவர்களும் முனிவர்களும் வழிமறித்து வணங்கிய தலமே 'தேவர் மறி'. அதுதான் பிற்காலத்தில் மருவி 'தேவர்மலை' ஆனது. நரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தால் இன்றும் இந்த தலம் வறண்ட பூமியாகவே காணப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் இந்த இடத்தில் தீர்த்ததை உண்டாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்து சாந்தப்படுத்தினார்கள். இந்தத் தீர்த்தத்திற்கு மோட்ச தீர்த்தம் என்று பெயர். சிறிய கோமுகியில் தானாகவே ஊற்றெடுக்கும் இந்த தீர்த்தத்தின் மூலம், தேவரகசியமாகவே உள்ளது. மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும். தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோவிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, மோட்ச தீர்த்தத்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
பக்தர்களது துன்பங்களை சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் இந்த நரசிம்மர். கமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும், பிரதோசத்தில் 11 முறை இந்த கோவிலுக்குச் செல்வதால், நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
கண்களையும், கருத்தையும் வெகுவாக கவரும் சிற்பங்கள்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம், ஸ்ரீவைகுண்டம் மூலவர் வைகுண்டநாதர். தாயார் - வைகுண்டவல்லி, பூதேவி.
நவ திருப்பதிகளில் ஒன்று. நவக்கிரகங்களில் சூரியனுக்குரியத் தலம்.
இங்குள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்து அற்புதமான சிற்பங்கள் உள்ளன. இந்த சன்னதி . மிக அற்புதமான வேலைப்பாடுகள் தன்னுள் தாங்கி நிற்கிறது . வரிசையாக யாளி உள்ள தூண்கள் , ஒவ்வொரு தூண்களிலும் விதவிதமான அழகிய சிற்பங்கள் ,மண்டபத்தின் மேல் பகுதியில் சுற்றிலும் பெருமாளின் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களின் பெருமாள் வடிவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் சிற்பச் சிறப்பெல்லாம் இம்மண்டபத்தில்தான் அமைந்து இருக்கின்றது. வரிசைக்கு ஒன்பது சிங்கப் போதிகையோடு (போதிகை என்றால், தூண்களின் மேற்பகுதியாக அமைந்து, மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும்) கூடிய யாளிகள் இருக்கின்றன. யானைமேல் யாளியும், யானையின்மேல் சிங்கமும் அதன்மேல் யாளியும் உள்ள தூண்கள் அவை. தெற்கேயிருந்து மூன்றாவது தரணில் யாளிகள் வாயில் அனுமார் நிற்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தூணின் மேலும் அனுமார் பலப்பல உருவங்களில் இருக்கிறார்.குறிப்பாக, ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் உலகளந்த பெருமாள், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் ராமர் அனுமார் சிற்பம், கணவரின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, நம் மீது தாவத் தயாராக இருக்கும் வானரம், நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் என, இது போல ஆயிரம் கதைகள் சொல்லும் சிற்பங்கள் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.
மண்டபத்தில் முகப்பில் உள்ள தூண் ஒன்றில் அகோர வீரபத்திரன் காட்சி கொடுப்பார். இவைகளையெல்லாம் விடச் சிறந்த வடிவங்கள் இரண்டு இம்மண்டப முகப்பில் உண்டு. ஒன்று ராமன், சீதாப்பிராட்டி சகிதனாகத் தனது இலங்கைப் படையெடுப்புக்கு உதலிய சுக்ரீவனை அணைத்து அருள்பாலிப்பது. ராமன் சுக்ரீவனுக்கு அருள்பாலிக்கும்போதே, லட்சுமணனும் அங்கதனையும், அனுமனையும் அணைத்துக் கொண்டு நிற்கிறார். இப்படி, வானர வீரர்களை ராமனும், லட்சுமணனும் அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப உலகிலே மிக அபூர்வமான ஒன்று.
சுருங்கச் சொன்னால் இக்கோவில் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நம் கண்களையும் கருத்தையும் வெகுவாக கவரும்.

மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் .கோவில்
சிவலிங்கம் போன்ற திருமேனி உடைய அபூர்வ பெருமாள்
திருப்பூர் மாவட்டத்தில், மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடேச பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. இக்கோவிலில் உள்ள மூலவர் வெங்கடேச பெருமாள் சாளக்கிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருடைய திருமேனி லிங்கம் போன்ற அமைப்பு கொண்டது. நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு எந்த வைணவ தலங்களிலும் காண முடியாத தனி சிறப்பாகும்.
தோல் நோய் தீர்க்கும் 'மல்லிப்பொட்டு' பிரசாதம்
இக்கோவிலில் பக்தர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைசாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தேகத்தில் தோன்றும் வெண்குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
கொங்கு திருப்பதி
திருப்பதி வெங்கடேசப் பெருமாளே இத்தலத்தில் அருள் பாலிப்பதாக ஐதீகம். எனவே, திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள், இத்தலத்திற்கு வந்து தாங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இதனால் இத்தலம் 'மேலத்திருப்பதி', கொங்கு திருப்பதி என்ற சிறப்பு பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே இங்கு செல்லவேண்டுமெனில், இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

தாராபுரம் உத்தரராகவப் பெருமாள் கோவில்
மார்பில் சங்கு சின்னம் தரித்த அபூர்வ பெருமாள்
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செய்த தலம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்துள்ளது உத்தரராகவப் பெருமாள் கோவில். மகாபாரத காலத்தில் இப்பகுதி விராடபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் வஞ்சிபுரி என்று அழைக்கப்பட்டு கொங்கு சோழர் காலத்தில் ராசராசபுரம் என்றானது. ராசராசபுரம் என்பது விஜயநகர பேரரசர் காலத்தில், ராராபுரம் என்று மருவி பின்னர் தாராபுரம் ஆனது.
மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது விராடபுரி என்று என்று முன்னர் அழைக்கப்பட்ட தாராபுரத்தில் தான். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டனர். இதில் ஓராண்டு அஞ்ஞானவாசம் இருந்து எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்பது கௌரவர்களின் கட்டளை. அதன்படி மறைந்து வாழ, பாண்டவர்கள் விராட நாட்டை தேர்ந்தெடுத்து, விராட மன்னனிடம் சேவகர்களாக பணிபுரிந்தனர்.
இத்தலத்து பெருமாள் கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் தனது கையில் தான் சங்கை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்து பெருமாள் மார்பில் சங்கு சின்னம் பொருந்தியுள்ளது.. இந்த சங்கை மகாலட்சுமியாக கருதி பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில்
நந்தி தேவர் வழிபட்ட பெருமாள் கோவில்
கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில், மருதாநல்லூர் அருகில் அமைந்துள்ளது நந்திவனம் நந்திநாதப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் செண்பகவல்லி. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் நந்திநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவக் கவிஞர் காளமேகப் புலவர் இக்கோவிலில் வழிபட்டார்.
சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்குத் தீர்வு காணும் பொருட்டு விஷ்ணுவை வழிபட நந்தி தேவர் இங்கு வந்தார். நந்தி தேவர் விஷ்ணுவிடம் இங்கேயே தங்கி தனது (நந்தியின்) பெயரை விஷ்ணுவின் சொந்த பெயரின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினார். எனவே இத்தலத்து பெருமாள் நந்தி நாத பெருமாள் என்று பெயர் பெற்றார். இந்த இடத்திற்கு நந்திவனம் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்தியாவட்டை பூ முதலில் தோன்றிய தலம்
இங்குள்ள நந்திநாதப் பெருமாளுக்கு, நந்தி தேவர் விண்ணுலகின் நந்திமணி மலரால் பூஜை செய்தார். இந்தப் பூ பூமியில் நிலைத்திருந்து, இன்று தமிழில் 'நந்தியாவட்டை' (பின்வீல் பூ) என்று அழைக்கப்படுகிறது.

அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்
திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.
பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்
பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம
பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு தீபாவளி அன்று சிரார்த்தம் செய்யும் சாரங்கபாணி பெருமாள்
கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுபடுகிறது. மூலவர் சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் திருநாமம் கோமளவல்லி.
ஒருசமயம், கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.
ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.
இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாளுக்கு நிவேதனம் செய்வது அன்றைய சிராத்தத்துக்காகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல