கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)

பெருமாள் சங்கு, சக்கரத்தினை கை மாற்றி ஏந்தி இருக்கும் அபூர்வ காட்சி

பெருமாளின் பின்புறம் தசாவதார மூர்த்திகள் இருக்கும் அரிய காட்சி

பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு

கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது சரநாராயணப்பெருமாள் கோவில். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், வரலாற்று சிறப்பு  வாய்ந்த கோவில் ஆகும். நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார்களால் ஸ்ரீ சாரங்கபாணியுடன் இணைந்து, மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

 இக்கோவில் மூலவர் சரநாராயணப் பெருமாள்  சிரித்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் வலதுகையில் சக்கரத்தையும் இடது  கையில் சங்கையும் ஏந்திருப்பார். ஆனால் இத்தல பெருமாள், சற்று வித்தியாசமாக, வலது கையில் சங்கையும், இடது கையில் சக்கரத்தையும் ஏந்தி காட்சி தருகிறார்.

சன்னதியில் சரநாராயண பெருமாளின் பின்புறம், மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோவில்  போற்றப்படுகிறது. அதனால்தான் இக்கோவிலை தசாவதாரக் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

கருவறையில் தசாவதாரங்கள்

இந்த கோயில் கருவறையில், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் என பத்து அவதாரங்களும் கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ள தனிச்சிறப்பு

இங்குள்ள உற்சவமூர்த்தியின் திருநாமம் லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர். பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை  காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ளார். இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.

 நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் பரிகாரத் தலம்

இங்குள்ள ஒன்பது அவதாரமும் ஒவ்வொரு கிரகங்களின் தலைவராக கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச அவதாரம் - கேது, கூர்ம அவதாரம் – சனீஸ்வரர், வராக அவதாரம் -ராகு, நரசிம்ம அவதாரம் செவ்வாய், வாமன அவதாரம் - குரு, பரசுராம அவதாரம் -சுக்கிரன், ராம அவதாரம் -சூரியன், பலராம அவதாரம் - மாந்தி(துணைகோள்), ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் – சந்திரன் ஆகிய நவகிரகங்களுக்கு தலைவர்களாக விளங்குகின்றார்கள். நவக்கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள், தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோவிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம்.

இக்கோவில் கடக ராசிக்காரர்களுக்கு உரிய கோவிலாகவும்  விளங்குகின்றது. வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலை வழிபடுவது மிகவும் சிறந்தது.

 

கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது

Previous
Previous

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

Next
Next

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்