திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்

அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும்  தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

மாத்ருஹத்தி , பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலம்

 திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும்,  லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். பரசுராமேசுவரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த ஊர், திருமகள் வந்து சுவாமியை வழிபட்டதால் திருமங்கலம் என ஆயிற்று.

இறைவன் திருநாமம்,  வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவனை சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. வேறு எந்த தலத்திலும் இறைவனின் திருநாமம் வேதத்தின் பெயரால் அமையவில்லை. மூன்று கோடி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் திருமங்கலம் சாமவேதீசுவரரைத் தரிசித்தால் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது. இறைவியின் திருநாமம் லோகநாயகி.

அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும்  தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

பொதுவாக சிவாலயங்களில்தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி  கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கும் கோலத்தில் காட்சி தருவார்.  ஆனால்,   இக்கோவிலில் அவருடைய தோற்றம் வித்தியாசமாக இருக்கின்றது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது வலது கரத்தில் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும் குழந்தை இல்லாதவரகளுக்கு குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய்,  பால், தேன் அபிஷேகம் செய்து தயிர் சாதம், சுண்டல் நெய்வேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும். 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 மாத்ருஹத்தி , பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலம்

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும் இக்கோவில் இறைவனை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றிருக்கின்றனர்.

அதனால் இத்தலம், மாத்ருஹத்தி,  பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகின்றது

 

லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

Previous
Previous

திருமீயச்சூர் மேகநாதர் கோவில்

Next
Next

கும்பகோணம் தசாவதாரப் பெருமாள் கோவில் (ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் சன்னதி)