திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்
நந்தியம்பெருமான் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கும் தேவாரத் தலம்
தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் தனது வாழ்நாள் முழுவதும், பல சிவாலயங்களுக்குச் சென்று, புதர் மண்டிக் கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, கோவில்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவர் உழவாரத் தொண்டு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இக்கோவில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சினார். திருஞானசம்பந்தருக்கு தனது தரிசனத்தை தர விரும்பிய இறைவன், தன் எதிரில் இருந்த நந்தியை சற்றே விலகி இருக்கச் செய்தார். அதனால்தான் இத்தலத்தில் நந்தியம்பெருமான், மற்ற தலங்களை போல் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கிறார்.