திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
மருத்துவச்சி அம்மன் என்று போற்றப்படும் பாகம்பிரியாள்
ராமநாதபுரம் மாவட்டம், தேவாரப் பாடல் பெற்ற தலமான திருவாடானையிலிருந்து 11 கி. மீ. தொலைவில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பாகம்பிரியாள் கோவில். இறைவன் திருநாமம் வல்மீக நாதர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இந்த கோவில் பழமை வாய்ந்ததும், விஷம் முறிக்கும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது.
தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இத்தலத்து அம்பிகை பாகம் பிரியாளை 'மருத்துவச்சி அம்மன்' என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை பாகம்பிரியாள் சன்னதியில் வைத்து பூஜித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் விஷப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோவில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து, அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், 'அமுக்கிப் போட்டா சரியாப்போகும்' என்று சொல்லும் வழக்கம் உள்ளது.
இக்கோவிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோவில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வல்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையை வணங்கி தீர்த்தம் பருகினால் புற்றுநோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெண்களுக்கான பிரார்த்தனை தலம்
பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் 'தங்கி வழிபடுதல்' என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.
இந்த அம்பிகை தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பிகைக்குரியதாக கருதுகின்றனர். அதனால் தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.
      
      உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
உலகின் முதல் வராகி அம்மன் கோவில்
காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.
இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.
ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.
அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது
வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்
வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.
பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
      
      ராமேசுவரம் கோதண்டராமர் கோவில்
ராமர், சீதை, லட்சுமணனுடன் விபீஷணர் இருக்கும் அபூர்வ காட்சி
ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். கருவறையில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர். ராமர் கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால், 'கோதண்டராமர்' என்றும், தலம் 'கோதண்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் பரிந்துரைந்த ஆஞ்சநேயர் இருக்கிறார். இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், உடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித தலமாக இப்பகுதி கருதப்படுகிறது. இராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோவில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாகும்.
விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், சீதையை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினார். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக ராமேசுவரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம்
விபீஷ்ணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர். விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர் ஆனால் ஆஞ்சநேயர் ராமனிடம் விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் ஆஞ்சநேயர், பரிந்துரைந்த ஆஞ்சநேயர் என பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. விபீஷணர் பட்டாபிஷேகம் ஆனி மாத வளர்பிறை நவமியன்று நடக்கிறது.
பிரார்த்தனை
குறுக்கு வழியில் தலைமைப் பதவி அடைய நினைப்போரை ஒடுக்கி வைப்பவர் இந்த ராமர். தரம் கெட்ட ராவணனுக்குப் பதிலாக ஒழுக்கத்தைக் கடைபிடித்த விபீஷணரை இத்தலத்தில் பதவியில் அமர்த்தியதால், நியாயமான வழியில் தலைமைப்பதவி கிடைக்க இவரை வணங்கலாம். தீயவர் சேர்க்கையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கோதண்டராம சுவாமி கோவிலின் சுவர்கள், ராமாயணக் கதையைச் சித்தரிக்கும் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
      
      திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் நரசிம்மர்
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள்.பொதுவாக நரசிம்மர் மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தருவார்ஆனால் நரசிம்மர் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இது புராதனமான கோவில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு ஆகும். இத்தலத்தில்தான் தசரத மகாராஜா குழந்தை பாக்கியத்திற்காக புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை தன் மனைவியருக்குக் கொடுத்தார். அதன் பலனால் ராமன், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் பிறந்தனர். எனவே இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
      
      திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்
பாலாபிஷேகத்தின்போது நீல நிறமாக காட்சி தரும் சிவலிங்கம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை, தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காரைக்குடியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஆதிரத்தினேசுவரர். இறைவியின் திருநாமம் சிநேகவல்லி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தின் பிற்பகுதியில் இத்தலத்தின் மூலவர் மற்றும் அன்னை திருமேனிகளில் சூரிய கிரணங்கள் படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தல வரலாறு
ஒரு சமயம், சூரியன் தானே மிகுந்த ஒளி உடையவன் என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான். அதன் காரணமாக நந்தியால் அவனது ஒளி ஈர்க்கப்பட்டு, சூரியன் ஒளி குன்றினான். பிரம்மதேவர் கூறியபடி சூரியன் இத்தலத்துக்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, நீல ரத்தினக்கல்லால் ஆவுடையார் மற்றும் லிங்கம் அமைத்து, ரத்தினமயமான அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது ஒளியை மீண்டும் பெற்றான். ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேசுவரர்' என்று பெயர். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது இறைவன் நீல நிறமாக காட்சி காட்சியளிக்கின்றார்.
சுக்ரனுக்குரிய பரிகாரத்தலம்
இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. அம்மனுக்கு விசேஷ சுக்ர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்ரதிசை, சுக்ர புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது. சுவாமி ஆதிரத்தினேசுவரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும்.
      
      மேலக்கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
இரவு வேளைகளில் மட்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் முருகன் தலம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும் பல ஆயுதங்களைப் பெற்றுச் சென்றார். அவற்றுள் பிரதானமான `மழு' எனும் ஆயுதத்தை முருகப் பெருமான் பெற்ற தலம்தான் கொடுமழுவூர் என்றழைக்கப்படும் மேலக்கொடுமலூர்.
மேலக்கொடுமலூர் என்றால் 'வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்' என்ற அர்த்தமும் உண்டு. அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும் பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அவர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.
முருகனுக்கு முப்பழ பூஜை
இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமன த்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறு கின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழ பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும். முப்பழ பூஜையின்போது முருகப்பெருமானின் அழகைக் காண்பதற்காகவே தமிழகமெங்கும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
முழங்கால் வலி தீர்க்கும் முருகன்
தீராத முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு, மஞ்சள் பூசப்பட்ட உடைமரக் கால்களை (கவட்டையுடன் கூடியது) வாங்கி சமர்ப்பித்தால், நாள்பட்ட முழங்கால் வலி நீங்கி விடும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
மேலும் வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகிய பாதிப்புகளால் அவதிப்படும் அன்பர்கள், இங்கு வந்து மாவிளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றால், விரைவில் அந்தப் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள்.
அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து, கோயிலின் தலவிருட்சமான உடைமரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
      
      இராமநாதர் கோவில்
காவி உடை அணியும் விநாயகர்கள்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில், தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க தலம் ராமேஸ்வரம். பாண்டிய நாட்டு தேவாரத் தலங்கள் பதிநான்கில் இத்தலமும் ஒன்று. இத்தலததில் இறைவன் ராமநாதசுவாமியுடன், அம்பிகை, பர்வதவர்த்தினி எனும் மலைவளர் காதலி அருள்பாலிக்கிறாள். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிராகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துறவிகள் போல, பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
      
      சுவாமிநாத சுவாமி கோவில்
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாறுபட்ட நிலையிலிருந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன்
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.
ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்
மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.
      
      எமனேஸ்வரமுடையார் கோவில்
ஆயுளை விருத்தியாக்கும் எமனேஸ்வரமுடையார்
பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் எமனேஸ்வரம். ராமநாதபுரத்தில் இருந்து இத்தல, 37 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமனேஸ்வரமுடையார். இறைவி சொர்ணகுஜாம்பிகை.
எமதர்மனை மன்னித்து அருளிய தலம்
சிவபக்தனான மார்க்கண்டேயருக்கு அவரது பதினாறாவது வயதில் ஆயுள் முடிந்து விடும் என்பது தலைவிதியாக இருந்தது. இறுதி காலத்தில் அவரது உயிரை பறிக்க எமதர்மர் பூலோகத்திற்கு வந்தார். இதனையறிந்த மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். மார்க்கண்டேயர் திருக்கடையூர் வந்த போது அவரது ஆயுள் முடிவடையயும் தருவாயில் இருந்தது. அதனால் அவர் மீது எமதர்மர் பாசக்கயிறை வீசினார். இதனால் பயந்த மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக் கொண்டார். இதனால் பாசக்கயிறு தவறுதலாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான், தனது பணியை சரியாக செய்யாத எமதர்மரை காலால் எட்டி உதைத்தார். இதில் எமதர்மர் பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் வந்து விழுந்தார்.
தனது தவறை உணர்ந்த எமதர்மர், தான் விழுந்த பகுதியில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்னர் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவரது வேண்டுதலுக்கு இணங்க அப்பகுதியில் எழுந்தருளினார்.
திருக்கடையூரில் சம்ஹார மூர்த்தியாக இருந்த சிவபெருமான் இத்தலத்தில் அனுக்கிரஹ மூர்த்தியாக திகழ்கிறார். அதனால் ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம் நீங்கவும் பக்தர்கள், இத்தலத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
      
      இராமநாதர் கோவில்
பாதாள பைரவர்
இராமர், இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்இராமேஸ்வரத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு 'பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
      
      இராமநாதர் கோவில்
காலில் சங்கிலியுடன் காட்சியளிக்கும் பெருமாள்
இராமேஸ்வரம் இராமநாதர் கோவிலில் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி உள்ளது.இவர் காலில் சங்கிலியுடன் காட்சியளிக்கிறார். சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
பிதுர்தோஷம் நீக்கும் பூஜை
கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் கடுமையான பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்..
      
      இராமநாதர் கோவில்
அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்
இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதிகம்.
இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.
இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
      
      மங்களேசுவரர் கோவில்
உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
கடலில் கிடைத்த மரகதப் பாறை
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற இடத்தில் மரைக்காயர் என்ற ஏழை மீனவர் வசித்து வந்தார். இவர் தினமும் உத்திரகோசமங்கை இறைவன் மங்களேசுவரர்ரை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று அடித்ததால் அவருடைய படகு நிலைகுலைந்து வெகுதூரம் போய் ஒரு பாசி படிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது அந்தப் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்துவிட்டது.
அதுவரை அடித்துக்கொண்டிருந்த புயலும் மழையும் சட்டென்று நின்று விட ஒரு வழியாக அந்த பாறையோடு சேர்த்து படகை செலுத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் கொண்டு வந்த பாசி படிந்த அந்தப் பாறைக்கல்லை என்னவென்று தெரியாமல் வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்திருந்தார். மரைக்காயர் வீட்டுக்குள் போக வர அந்தக் கல் மீது நடந்து நடந்து அதன் மேலே ஒட்டியிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் அந்த கல் பச்சை நிறத்துடன் பள பளவென்று மின்னியது.
மரைக்காயர் அந்த பச்சை பாறையை அரசரிடம் தந்தால் தமது வறுமை நீங்கும் என்று எண்ணி பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு கடலில் நடந்த அனைத்தையும் விவரித்து தனது வீட்டில் உள்ள பச்சைக்கல் விபரத்தை சொன்னார். அரண்மனை ஆட்கள் அந்த பச்சை பாறையை எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள்
ரத்தின கற்களைப் பற்றிய விபரம் அறிந்த ஒருவர் அதை சோதித்துப் பார்த்தார். பச்சை பாறையை சோதித்த அவர் ஆச்சரியத்துடன், இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மன்னரிடம் சொன்னார் மன்னர் பச்சை பாறைக்கு உரிய பொற்காசுகளை மரைக்காயருக்கு அளித்து வழியனுப்பி வைத்தார்.
சித்தர் வடித்த மரகத நடராஜர் சிலை
அந்த அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலையை செதுக்க வேண்டும் என்று அரசன் விரும்பினார். ஆனால் அந்த சிலை வடிப்பதற்கு தகுதியான சிற்பி மன்னருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை அரசன் முதலாம் கயவாகு அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதி யைப் பற்றிய விவரம் கிடைத்தது. சிற்பி ரத்தினசபாபதி பாண்டிய மன்னன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை கண்டதும் மயங்கி விழுந்தவர், என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது என்று கூறி சென்றுவிட்டார்.
மன்னர் வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னிதி முன் நின்று பிரார்த்தனை செய்தார் அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிய மன்னரும் பிரஜைகளும் ஒரு சித்தரை கண்டனர் அந்த சித்தரின் பெயர் சண்முகவடிவேலர்.
மன்னரின் கவலை நீங்கியது மரகத நடராஜரை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முகவடிவேலரிடம் ஒப்படைத்தார். சித்தர் சண்முகவடிவேலர் அந்த பெரிய மரகதப்பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக செதுக்கினார் அந்த சிலைதான் உத்தரகோசமங்கையில் இப்போதும் காட்சியளிக்கும் மரகத நடராஜர். இந்த நடராஜர் சிலையின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் கூட, பால் அபிஷேகத்தின் போது நமக்கு தெரியும் அளவுக்கு மிக நுணுக்கமாகவும், அழகுடனும் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் நமக்கு காட்சியளிப்பார். மார்கழி திருவாதிரையின்போது பழைய சந்தன காப்பு களையப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் மீண்டும் புதிய நடன கோலத்துடன்சந்தனக்காப்பு இடப்படும். புன்னகை தவழும் கம்பீரமான முகத்துடன் திருநடன கோலத்துடன் காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை மரகத நடராஜரை, அவசியம் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.
      
      வெயிலுகந்த விநாயகர் கோவில்
சூரியன் வழிபட்ட விநாயகர்இக்கோவில் மூலவர் விநாயகர்
மீது வருடம் முழுவதும் சூரிய ஒளி படுவதால் இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலைக் கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் (ஆடி- மார்கழி) தெற்கு பகுதியிலும், உத்தராயண காலங்களில் (தை-ஆனி) வடக்கு பக்கமாகவும் சூரியஒளி படுகிறது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் இந்த ஊருக்கு உள்ளன. ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் முதலில் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கித்தான் சென்றார். உப்பூர், தொண்டியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 29 கிமீ தொலைவில் உள்ளது .
      
      ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ராமபிரான் சயன கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் திருநாமம் கல்யாணவல்லி.
இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது.
ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்றது. மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் (ராமபிரான்) சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமபிரான், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது. இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.