பாடி திருவலிதாயநாதர் கோவில்
குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்
சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.