பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

விநாயகர் சதுர்த்தி திருவிழா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 10 நாட்கள்

நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை

படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்

பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்குறுணி கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து சுட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு, மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவார்கள். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.

Read More
திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரர் கோவில்

பூவை விழுங்கும் விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இறைவன்

திருநாமம் புராதனவனேசுவரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

இக்கோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியை வலம் வரும் இடத்தில், பூவிழுங்கி விநாயகர் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார்.

அம்மன் சன்னதியை வலம் வருவோர் இவரது செவியில் உள்ள துவாரங்களில் தமது வேண்டுதல்களை மனதில் நினைத்து பூக்களை வைக்கிறார்கள். காதில் வைக்கப்படும் பூவை இவ்விநாயகர் காதுக்குள் இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். காரியங்கள் நிறைவேறாது என்றால் செவிகளில் வைத்த பூக்கள் அப்படியே வைத்தவாறே இருக்கும்.பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூ வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோவில் என்றே மருவி வருகிறது.

Read More
குணசீலம் தார்மீகநாதர் கோவில்

குணசீலம் தார்மீகநாதர் கோவில்

பித்ருதோஷ நிவர்த்திக்கான தலம்

தோல் நோய்களை தீர்க்கும் அம்மனின் குங்குமப் பிரசாதம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.

ஒரு சமயம் இப்பகுதியில் பிரளயம் ஏற்பட்ட போது காவிரி ஆற்றில் ஒரு சிவலிங்கம் அடித்து வரப்பட்டது. இரண்டாகப் பிளந்த அந்த லிங்கத்தின் ஒரு பகுதி வடகரையிலும் (குணசீலத்திலும்) மற்றொன்று தென் கரையிலும் பிரதிஷ்டை ஆனது. அவ்வாறாக உருவானதுதான் குணசீலம் தார்மீக நாதர் மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவில்கள். இறைவனின் பிளவுபட்ட பகுதி பின்புறம் உள்ளதால், சுவாமி தரிசனம் செய்யும்போது நமக்கு எவ்வித வேறுபாடும் தெரியாது.

இத்தலத்து தார்மீகநாதர் பிளவுபட்ட திருமேனியாக காணப்படுவதாலும், இவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதாலும் கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை தரும் தெய்வமாக தார்மீகநாதர் திகழ்கிறார். பக்தர்களின் பித்ருதோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகார நாயகராக இவர் அருள் புரியுன்றார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பித்ருதோஷ நிவர்த்தி பரிகாரம் இக்கோவிலில் செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பித்ருதோஷ பரிகார நிவர்த்தி வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

கோவிலின் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் இறைவி ஹேமவர்னேசுவரி அம்மன் சன்னதி உள்ளது. ஹேமவனேசுவரி என்றால் தங்கநிறத்தை உடையவள் என்று பொருள். இங்கு நின்ற திருக்கோலத்தில், இரண்டு கரங்களுடன் அபயஹஸ்த முத்திரைகளுடன், தெற்குத் திசை நோக்கி புன்னகைத் தவழ அம்மன் காட்சியளித்து வருகிறார்.

இந்த அம்மனுக்கு குங்கும் அர்ச்சனை செய்து, வழிபாடு நடத்தி, அப்போது தரப்படும் குங்குமத்தை பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

Read More
மாறாந்தை கயிலாயநாதர் கோவில்

மாறாந்தை கயிலாயநாதர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அபூர்வ காட்சி

திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாறாந்தை கயிலாயநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடையம்மாள். இத்தலத்து இறைவன் திருமேனியில் பசு மாட்டின் குளம்படி தடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இப்பகுதி முற்காலத்தில், மாறன் தாய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. 'மாறன்' என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். 'தாயம்' என்பதற்கு 'உரிமை என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை, மக்களுக்கு விட்டுக் கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும்படியாக இப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது மாறாந்தை என அழைக்கப்படுகிறது.

பொதுவாக, ஆலமர்ச் செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி தருவார். இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்தருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

வேறெந்த ஆலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக, இவ்வாலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உள்ளது. பாலபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்து இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்குச் சிறந்த கல்வி, உயர்பதவி, தொழில் முன்னேற்றம் கிடைக்கின்றன.

Read More
திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்

பெருமாளுக்கு மிகவும் பிரியமான திவ்ய தேசம்

காவிரியில் 108 முறை நீராடிய பலன் தரும் தலம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம், திருச்சேறை. மூலவரின் திருநாமம் சாரநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட தலம் இது. இத்தலத்து தீர்த்தம் சார தீர்த்தம். இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் காட்சி அளிக்கிறாள். இதற்கான பின்னணியை தல வரலாறு விவரிக்கின்றது.

ஒரு முறை காவிரித் தாய், திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், 'தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்' என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். அன்று முதல், கங்கைக்கு நிகராகக் காவிரியும் போற்றப்படலானாள்.

காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரம், இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பெறுகிறது.

திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.

Read More
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

விஷக்கடியை குணப்படுத்தும் விஷ ராஜா

நாகத்தை வாயில் கடித்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.

காளத்தீஸ்வரர் கோவிலுக்கு வெளியில், நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத நாகராஜனின் அம்சமான விஷ ராஜா எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது வாயில் நாகத்தை கடித்தபடி காட்சி தருகிறார். விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பௌர்ணமியன்று இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அணிவித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் விஷக்கடிக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து குணமாகிறார்கள். இத்தலத்து விஷ ராஜாவை வழி பூஜை செய்து வழிபட்டவர்கள், எந்தவிதமான விஷக்கடிக்கும் உள்ளாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

காளிதேவியுடன் எழுந்தருளி இருக்கும் சப்த மாதர்கள்

பொதுவாக கோவில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்கள் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் அஷ்ட மாதர்களை (எட்டு அம்பிகையர்) நாம் தரிசிக்கலாம. ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றவர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள் இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது.

Read More
சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்

சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்

எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம்

திருக்கடையூருக்கு இணையாக ஆயுள் விருத்தி அளிக்கும் தலம்

சென்னை மாநகரின் ஒரு பகுதியான வேளச்சேரியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த தண்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கருணாம்பிகை.

முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.

சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.

வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் 'வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும்.

திருக்கடையூரில், 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற எமதர்மனை, சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். எமதர்மனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமதர்மன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமதர்மனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், 'தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

பிரார்த்தனை

எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.

வேலை இழந்தவர்கள் நல்ல வேலை கிடைக்க தண்டீஸ்வரரை வேண்டிக் கொள்கிறார்கள். .

Read More
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு

சுழலும் தேங்காய்

தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.

இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.

இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

Read More
தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர்

பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இத்தலத்து இறைவன் ஸ்ரீகாகஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்ட சித்தருக்கு பிரதோஷ காலத்தில் இறைவன் காட்சி கொடுத்ததால், இவ்வாலயம் பிரதோஷ ஆலயமாக அமையப் பெற்றுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியானவர், மிகவும் இளைய கன்றுக்குட்டியின் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், முகமோ அல்லது தலையோ ஏதேனும் ஒரு பக்கமாக சாய்ந்தது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இங்குள்ள நந்தியானது, இளங்கன்றாக இருப்பதால் இவருக்கு பால நந்தி என்று பெயர். இவர் பால நந்தியாக இருப்பதால், பிரதோஷ காலங்களில் கொம்புகள் இடையூறின்றி நேரடியாக நாம் சொர்ணபுரீசுவரரை தரிசிக்க முடியும்.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குளி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கரப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவது ஒரு அற்புதமான காட்சியாகும்.

இங்குள்ள பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், நீலநிறமாக மாறிக் காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை:

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

Read More
நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்

யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி இருக்கும் அபூர்வ காட்சி

சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது.

இத்தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிரமாகத் தோன்றினார் நரசிம்மர். அவரை சாந்தமாக இருக்கும்படியும் தான் பெற்ற தரிசனம் மற்றவர்களும் பெற வேண்டும் என்றும் வேண்டினார். அதனால் லட்சுமியை மடியில் ஏந்தி புன்னகைத்த திருக்கோலத்துடன் இங்கு எழுந்தருளினார்.

கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மர், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி காட்சி தருவது தனி சிறப்பாகும்.

பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் பிரார்த்தனை சக்கரம்

சக்கரத்தாழ்வார் சன்னதியின் எதிரில் ஒரு சிறு மேடையின் மேல் அமைந்திருக்கிறது பிரார்த்தனை சக்கரம். பிரயோக நிலையில் ஏவப்படுவது போல் காட்சி தரும் இந்த பிரார்த்தனை சக்கரம், இக்கோவிலில் நடந்த அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்தது. இந்த பிரார்த்தனை சக்கரம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். பக்தர்கள் பிரார்த்தனை சக்கரத்தை தொட்டு கண்களை மூடி தங்களின் பிரார்த்தனைகளைச் சொல்லிவிடுகிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள் நெய் தீபமிட்டு, நாற்பத்து எட்டு முறை வலம் வந்து ஸ்ரீ சுதர்சனரை வழிபட்டால் இடையூறுகள் மறையும், கவலைகள் நீங்கும் என்பது பலரின் அனுபவமாக உள்ளது.

Read More
மதுரை பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோவில்

மதுரை பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோவில்

சிவபெருமானின் தோற்றத்தில் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் நான்கு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் கோலத்தில் காட்சி தருகிறார். தெற்கு பார்த்து அருள் பாலிக்கும் இந்த சிவதட்சிணாமூர்த்தி, புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபய முத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல் கையில் நாகம், இடது மேல் கையில் அக்னி என சிவபெருமானின் கோலத்தில், தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவர் சிவ தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

Read More
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

சுவாமி, அம்பாள் எதிர் எதிரே அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு

மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

மூலவர் கொழுந்துநாதர் மேற்கு திசை நோக்கி, பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை தேனாம்பிகை கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இவ்வாறு சுவாமியும் அம்பாளும் எதிர் எதிர் திசையில் காட்சியளிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ளதால், இந்த வடிவமைப்பு இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

பாலாபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரியும் அரிய காட்சி

மாசி பௌர்ணமி அன்று இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரிவது இத்தலத்தில் மட்டுமே நாம் காணக்கூடிய அரிய காட்சி ஆகும்.

பிரார்த்தனை

இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

Read More
வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்

சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்

முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.

கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.

இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.

இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.

பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.

அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.

சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.

முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.

அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.

Read More
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்

பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.

உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். .ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.

இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது. இவ் விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும், மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் -பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது) . காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.

விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை

இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது..

தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம். இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.

ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.

பிரார்த்தனை

ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம். இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருவிழா

ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருவிழா இத்தலத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் அன்று நடைபெறும்.

Read More
வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்

கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம்

தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது.

மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக் கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். அவருடைய வயிற்று வலியை இத்தலத்து பெருமாள் தான் குணப்படுத்தினார். வயிற்று வலி குணமான பின்னர் நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைத்தார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும், அனுமார் தாளம் தட்டி அதை ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர். நாராயண தீர்த்தர், தனது இறுதி காலம் வரை ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, 'உறியடி' என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார்.

நாராயண தீர்த்தருக்கு சுவாமி கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகி.றது. கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். ஆனால் இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது, லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள். வரகூருக்கே பெருமை தரும் உறியடித் திருவிழாவில் 'ராஜாங்க சேவை' சிறப்பு அலங்காரம் கண் கொள்ளாக் காட்சியாகும். அன்றுதான் உறியடி ஆரோகணமும் மேற்கொள்ளப்படுகிறது.. அடுத்த நாள் ஸ்ரீவேணுகோபால சேவை, அதற்கடுத்த நாள் ஸ்ரீகாளிங்க நர்த்தன சேவை. மறுநாள் உறியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் சேவை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை, ஸ்ரீசயன ரங்கநாதப் பெருமாள் சேவை, ஸ்ரீயசோதா கிருஷ்ணர் சேவை என்று கோலாகலமாக விழா வெகு சிறப்பாக நடந்தேறும்.

கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். சுவாமிக்கு முறுக்கு சீடை தட்டை பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன், தவழும் கண்ணனாக கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில் பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து விதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் ‘உறியடியோ கோவிந்தோ’ என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக் காண கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர. இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். அந்தரத்தில் ஊசலாடிய உறியை பிடித்து அதன் உள்ளே இருக்கும் பிரசாதங்களை எடுப்பார்கள். பின் சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்வார்கள். வழுக்கு மரத்தின் மேல் வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்து மேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.

Read More
குருவாயூர் குருவாயூரப்பன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

குருவாயூர் குருவாயூரப்பன் கோவில்

சிறுபாலகனுக்காக, தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட கிருஷ்ணன்

கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது../ இத்தலத்து கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு சிறுபாலகனுக்காக, கிருஷ்ணன் தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட நிகழ்ச்சியைத்தான் இப்பதிவில் நாம் காணலாம்.

முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.

பாலகனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், 'கண்ணா! சாப்பிடு.' என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், றும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான். தயிரை சாதத்தில் கலக்கி, வடுமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. 'சாப்பிடு கண்ணா!' என்று கெஞ்சினான். தயிர் சாதம் அப்படியே இருந்தது. 'என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு' என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் (கோவில் பொறுப்பாளர்) கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. பிஷாரடி 'சாதம் எங்கே?' என்று கேட்டார். குழந்தையும், ‘கண்ணன் சாப்பிட்டு விட்டான்’ என்று சொன்னான்.

நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, 'நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்' என்று சொன்னார். நம்பூதிரி, 'நைவேத்தியத்தை என்ன செய்தாய்?' என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, 'கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்' என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், 'தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?' என்று அடித்தார்.

குழந்தை இடத்தை விட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, 'நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்' என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர். நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, 'என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!' என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.

Read More
பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்

மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.

இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

Read More
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.

பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

Read More
நாகந்தூர்  பட்டாபிராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாகந்தூர் பட்டாபிராமர் கோவில்

ராமர் தங்கிய ஊர்களில், அவர் மிகவும் விரும்பிய இடம்

இராமர், லட்சுமணன் வில்லில் மணி கட்டியிருக்கும் அரிய காட்சி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி. மீ., தூரத்தில், நாகந்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பட்டாபிராமர் கோவில் .இராமர் ராவண வதத்தை முடித்துக் கொண்டு சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்புகையில் பல இடங்களில் தங்கி பயணித்தார். அப்படி அவர்கள் தங்கிய ஊர்களில் இத்தலமும் ஒன்று. இங்கு தங்கி இருந்தபோது, இத்தலத்தின் இயற்கை அழகில் ராமர் மிகவும் மனம் லயித்து போனார். .சீதா தேவியிடம், தங்கிய இடங்களிலே 'நான் உகந்த ஊர்’ இது என்றார். ராமர் குறிப்பிட்டதே பின்னாளில் .நாகந்தூர் என மாறியது. மேலும் இக்கோவில் கருவறையில் ராமர் அயோத்தியில் பட்டாபிஷேகத்தின் போது எந்த வகையில் காட்சி தந்தாரோ, அதே நிலையில் இங்கும் காட்சி தருகிறார். மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.

பிரார்த்தனை

இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால், ஓரிரு வாரங்களிலேயே அவர்களது கிரக தோஷம் விலகுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும், இக்கோவிலில் வழிபட்டால் முன்னேற்றம் காணலாம்.

Read More
நெடியமலை செங்கல்வராய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நெடியமலை செங்கல்வராய சுவாமி கோவில்

திருத்தணிகை செல்வதற்கு முன்பு வணங்க வேண்டிய திருப்புகழ் தலம்

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது செங்கல்வராய சுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. யானை படுத்துக் கொண்டிருப்பது போல் இந்த மலை உள்ளதால், யானை மலை, கஜகிரி என்ற பெயர்களும், நெடியமலைக்கு உள்ளன. .அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது..

முருகனை இத்தலத்தில், இந்திரன் 'செங்கல்வம்' என்னும் நீலோத்பல மலரால் வழிபட்டமையால், முருகன் 'செங்கல்வராய சுவாமி' என்று போற்றப்படுகிறார். இங்கே முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு இருபுறமும் தேவிமார் சூழ, கடிஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகப்பெருமான் வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்து வர, வேடர்கள் அவருடன் போருக்கு வர, முருகன் போர் புரிந்து சினம் அடங்காமல் நின்ற இடம் தான் இத்தலம். அவரது சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே, அருகிலுள்ள தணிகைமலையில் சென்று கோபம் தணிந்தாராம்.. முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு பின்னர் திருத்தணிக்கு செல்லலாம்.

பிரார்த்தனை

கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More