கன்னியாகுமரி  பகவதி  அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன்

இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.

தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

Read More
சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்

சிருங்கேரி சாரதாம்பிகை

கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.

கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

Read More
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்

மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.

கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா

சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.

Read More
ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி அம்மன்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில், பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில். அன்னபூரணி என்றாலே அன்னத்தை பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணியை தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டு திரும்பி செல்ல முடியாது. கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்கு கூட பசும்பால் தரப்படுகிறது.

கருவறையில் அன்னபூர்ணேசுவரி தங்கத்தாலான திருமேனி உடையவளாய், நான்கு கரங்களுடன் பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அன்னையின் மேல் இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி இருக்கின்றன. அபய முத்திரையுடன் விளங்கும் அன்னையின் வலது கீழ் கையில் காயத்ரி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வரத முத்திரை தாங்கி நிற்கும் இடது கீழ் கையில் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

பார்வதிதேவி அன்னபூரணியாக அவதரித்த வரலாறு

ஒரு முறை, சிவபெருமானுக்கும்,பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்க தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவு பொருட்கள் ஏதும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்க பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தை போக்கி அருள்பாலித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டாள் என்பது வரலாற்று கதை.

இந்த அன்னபூர்ணேசுவரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்கு தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியை கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாக தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை. அன்னபூர்ணேசுவரியை வணங்குபவர்களுக்கு, 'அன்னதோஷம்' என்னும் வறுமை அணுகவே அணுகாது.

Read More
திருச்சானூர் பத்மாவதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி கோவில்

திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார்

ஆந்திர மாநிலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். இக்கோவில் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற பெயரும் உண்டு. சொல் வழக்கில், அலமேலு என்று அழைப்பார்கள். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கைத் தாயார்.'

திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டார் என்றும், அந்த விளக்குகள் இன்றும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டார் என்கின்றது தலபுராணம். அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால், இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று தொண்டைமான் பெயரிட்டான்.

இந்த ஆலயத்தில் வழிபட்டப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல் மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்னார். குறத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ‘வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ' எனும் அலர்மேல் மங்கை தாயார் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
ராமேசுவரம்  ராமநாதசுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்

ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன்

பாண்டிய நாட்டு 14 தேவாரத் தலங்களில் ஒன்று ராமேசுவரம். இறைவன் திருநாமம் ராமநாதசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி. பர்வதத்தின் (பர்வதம்=மலை) மகள், பர்வத வர்தினி ஆனாள். 'வர்தன' என்னும் சொல்லுக்கு 'வளர்ச்சி, விரிவு' என்னும் பொருள்கள் உண்டு. பர்வத அரசர் (ஹிமவான்) வளர்த்த மகளாக, பர்வத வம்சத்தின் விரிவாக ஓங்கி நிற்பவளுக்குப் பர்வதவர்தினி என்பது திருநாமம். மலையத்துவச மன்னர் (ஹிமவான்) வளர்த்த மகள் என்பதைக் குறிப்பதாக இந்த அம்பிகையை மலைவளர் காதலி (மலை வளர்த்த பாசத்திற்குரியவள்) என்றே திருஞானசம்பந்தரும், தாயுமானவரும் அழைக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி பீடம்.

சுவாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோல நாயகியாக, நான்குத் திருக்கரங்களுடன் அம்பிகை காட்சி தருகிறாள். கீழ்க்கரங்கள் அபயமும், வரமும் காட்ட, மேல் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு இவள் நிற்பதைப் பார்த்தால், 'நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று கூறுவது போன்றே தோன்றுகிறது. தாமரை மலர்களைத் தாங்கியவள் என்பதாலோ என்னவோ, நவராத்திரி காலத்தில் தாமரைச் செல்வியான மகாலட்சுமிக் கோலத்திலும் அம்பிகை காட்சி தருவது வழக்கம். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

அம்பிகை பர்வதவர்தினியிடம் வேண்டிக்கொண்டால், எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது பக்தர்களின் நெடுங்கால அனுபவம்.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

Read More
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை மரகதாம்பிகை அம்மன்

திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில், மலையின் மேல் அமைந்துள்ள தேவாரத் தலம், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோவில். மலைமேல் அமைந்த வெகு சில தேவாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. சுமார் 500 படிகள் ஏறினால் கோவிலை வந்தடையலாம். அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் திருநாமம் மரகதாசலேசுவரர், ஈங்கோய்நாதர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். கருவறையில், அம்பாள் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கின்றது.

மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின், முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் வணங்க மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக் கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர்.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்

சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன்

அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சிஅம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.

இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார். மதுரையில் மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு மீனாட்சி அம்மனை முதலில் வணக்க வேண்டும். பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். பொதுவாக சிவாலயங்களில் முதலில் இறைவனுக்கு நைவேத்யம் செய்தபிறகு, அதையே தான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாட்சிக்கு முதலில் நைவேத்யம் செய்துவிட்டு, பின்னர் சுந்தரேஸ்வர் உட்பட பிற மூர்த்திகளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.

மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள்

மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தம். அது போன்றே மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் பல நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. அவைகளில் சில - பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள், முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள். தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலநாயகப் பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.

அம்மனின் தங்க கவசம் - 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும்.

ரத்தின செங்கோல் - இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை, கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.

வைர கிரீடம்

1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம்.

விக்டோரியா மகாராணி பார்வைக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய நீலநாயகப் பதக்கம்

நீலநாயகப் பதக்கம் மன்னர் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. நீலநாயகப் பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு இங்கிலாந்து போனார் . எடுத்துக் கொண்டு போனவர் அதை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டார்.

பீட்டர் பாடுகம்

அம்மனின் திருவடிகள் தாங்கும் தங்க மிதியடிகள்-ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த மிதியடிகளை, சிறுமி வடிவில் வந்து தன் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மனுக்கு ரவுஸ் பீட்டர் (1812-1828) என்ற ஆங்கிலேய கலெக்டர் காணிக்கையாக அளித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் அவரது பெயரை, காலணிகளின் அடியில் 'பீட்டர் பாடுகம்' என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்தார்.

Read More
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

தன் பக்தையிடம் தங்கக் காசு மாலை கேட்ட மயிலை கற்பகாம்பாள்

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மிகவும் முக்கியமானது. மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்னும் சிறப்புடையது. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.

இத்தலத்து இறைவி கற்பகாம்பாள், நான்கு திருக்கரங்களுடன் அபய-வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இந்தத் தங்கக் காசு மாலையின் பின்னணியில் அம்பிகையின் திருவிளையாடல் உள்ளது.

இக்கோவிலில் 1950-ம் வருடத்திலிருந்து, 'கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி' என்னும் பெண்கள் குழு அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இந்தக் குழுவிற்கு 'குரு பாட்டி' என்பவர் தலைவியாகவும், ஆனந்தவல்லி என்பவர் செயலாளராகவும் இருந்தனர். அனுதின பாராயணத்தைத் தவிர கோவிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்து வந்தனர்.

1970-ல் ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் வந்த கற்பகாம்பாள், 'நீயும் உனது குழுவினரும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறீர்கள். காசி விசாலாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும் இருப்பதைப் போல் எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும்' என்று கேட்டாள். குரு பாட்டியும் தான் கனவில் கண்டதை தன் குழுவினரிடம் சொன்னாள். அனைவரும் நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.

வருடங்கள் பல சென்றும், குழுவினரால் காசு மாலைக்கு தேவையான பொருளை சேர்க்க முடியவில்லை. 1978-ல் குருபாட்டியும், ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள், இது பொருட்டு காஞ்சி மகா பெரியவரிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர். 'என்ன? காசுமாலைக்கு பணம் சேரலியா' என்று அவர்கள் முறையிடும் முன்னரே, மகா பெரியவர் கேட்டதால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ' கேட்டவள் அம்பிகை தானே. அதற்கு அவளே அருள் கொடுப்பாள். கவலைப்பட வேண்டாம்' என்று சொன்னார். மேலும் 'விசாலாட்சிக்கும், காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனால் கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை' என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் 'கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர்வச்சு, நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்.

மகா பெரியவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. ஒவ்வொரு தங்கக் காசிலும், காசின் ஒரு புறத்தில் சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோவிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது -பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. தங்க காசு மாலையும் உருவானது.

கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலையை சமர்ப்பிக்கும் விழா 26. 2. 1986 அன்று கொண்டாடுவது என்று முடிவானது.

ஆனால், 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்து, பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்கள் , அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்து விட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடு காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச்சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த மகா பெரியவர் , 'ஏன்? உங்க செயலாளர் வரலியா?' என்று கேட்க, இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசுமாலையை பார்வையிட்ட மகா பெரியவர், 'மாலை சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட, உங்க செயலாளர் உடன் இருப்பார். கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார்.

அனைவரும் நேராக ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதேநேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன், ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.

26-2-1986 அன்று நடந்த காசுமாலை சமர்ப்பண விழாவில், ஆனந்தவல்லி கணவரும் கலந்து கொண்டார். ஆனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி, மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

மேலும், காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.

Read More
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்

நாயன்மார்களால் பாடப்பட்ட தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.

பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.

கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள்.அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேட நாட்களில்‌ சந்தனக்காப்பு, மஞ்சள்‌ காப்பு, புஷ்ப அலங்காரம்‌ ஆகியவற்றுடன்‌ அம்மன்‌ தோன்றும்‌ போது, அக்காட்சியைக்‌ காணும்‌ கண்களே பாக்கியம் செய்தவை. இந்த அன்னையைப் பலரும் வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடைந்தார்கள்.

இந்தத் தலத்தில், இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி வழங்கி அருளினார். அவரைப் போன்றே யோகத்தில் ஆழ்ந்து சிவ மந்திரங்களை ஜபித்து, இறைவனிடத்தில் ஈடுபடும் அடியார்கள், பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று அகத்தியர் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் சிவயோகத்தின் இரகசியங்களை அன்னைக்கு இந்தத் தலத்தில் உபதேசம் செய்து வைத்தார். அதோடு, தானே எல்லா சுகங்களையும் துறந்து, தியாகம் செய்து தியாகராஜராக எழுந்தருளி, யோகமும் செய்து, இந்த யோகத்தின் மூலம் அடியார்கள் பெறக்கூடிய பரமானந்த நிலையைத் தான் அடைந்து, அன்னைக்குக் காண்பித்தார்.

Read More
மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பு

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.

மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

தர்ப்பணம் கொடுக்கும் போது குளக்கரை, நதிக்கரை அல்லது கடற்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகில் வைத்தே தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது நியதி. காசி, ராமேஸ்வரம், கயா, திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி , விளமல், தீர்த்ததாண்டதானம், திருச்செந்தூர், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர் முதலான தலங்கள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்கள் ஆகும்.

சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து, அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

நடராஜப் பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நடராஜப் பெருமான் தன் சடா முடியை விரித்த நிலையில், ஆனந்த தாண்டவ கோலத்தில் நமக்கு காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் , வேறு எங்கும் இல்லாத வகையில், தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். நடராஜரின் இத்தகைய கோலம் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா, சரஸ்வதியோடு காட்சி தருவதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.

Read More
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் உருவான கோவில்

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஶ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. தனி சன்னதியில் பத்மாவதி தாயார் எழுந்தருளி இருக்கிறார்.

தல வரலாறு

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே பெருமாள் சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு 'கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்'என்று பெயர் சூட்டப்பட்டது.

திருப்பதியில் ஓர் நாள் என்னும் இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் தனித்துவமான உற்சவம்

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் இந்த கோவில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும், 'திருப்பதியில் ஓர் நாள்' என்னும் மகா உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே இத்தலத்திலும் நடைபெறுவது தனிச்சிறப்பாகும் . திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே. அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். அன்று, திருமலை வேங்கடவன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம்.

Read More
உதயகிரி  முத்து வேலாயுத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில்

பக்தர்கள் விரும்பிய வரத்தை தரும் முருகன்

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது, சுமார் 700 ஆண்டுகள் பழமையான உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு. கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோவில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையில் முத்து வேலாயுத சுவாமி, நின்ற கோலத்தில் வலது கையில் தண்டத்தை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் 15,16,17 தேதிகளில் இங்குள்ள மூலவர் மீது சூரியனின் கதிர்கள் படுவதால் இந்த முருகன், உதயகிரி வேலாயுத சுவாமி என அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்பிய வரத்தை முருகப்பெருமான் தருவதாக அனுபவம் வாய்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்தி, 108 தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்ச வாழ்வு வாழலாம். உடலில் தேமல், கட்டி போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுவோர் இத்தலத்து தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இட்டு முருகப்பெருமானை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப்  பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் தலம்

திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில், குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோவில். இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மூலவர் வைகுண்ட நாராயணப் பெருமாள், நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில், வலது கரத்தில் பிரயோக நிலையில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி, கீழ் இரு கரங்கள் வரத, அபய முத்திரையோடும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாள் வைகுண்ட லோகத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதால் இத்தலம் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான், மானுட வடிவில் இந்த தலம் வந்து இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு அலர்மேல் மங்கை தாயாரை திருமணம் செய்ய கடன் பெற்று சென்று தாயாரை திருமணம் செய்து கொண்டு,இழந்த செல்வத்தை பெருமாள் மீண்டும் பெற காரணமாக அமைந்த கோவில் இது

கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இக்கோவில் சேதமடைந்தது. இந்த ஊரைச் சேர்ந்த, சென்னை மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றியவரும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவராமன் கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு கோவில் கட்டி புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் சிவராமன் கோவிலை புதுப்பித்து, 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

சுக்கிர தோஷ நிவர்த்தி தலம்

மார்கழி மாதம் அதிகாலையில் சுக்கிர பகவான் தனது ஒளியால் இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன் பலம் இழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றிருந்தாலோ, அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தலத்திற்கு வந்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும். காதல் திருமணம் கைகூட நினைப்பவர்கள், இத்தலத்து பெருமாளின் காலடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து அர்ச்சித்து பின்னர் அந்த எலுமிச்சம்பழச் சாறை அருந்தினால், வர்களது வேண்டுதல் நிறைவேறும்.

பிரார்த்தனை

இந்த தலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருமணத்திற்கு பணம் தந்து உதவியதால் இவரை வழிபட சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இந்த தலத்தில் உள்ள குபரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்ள சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை வழிபட்ட 90 நாட்களில், திருமணம் நிச்சயம் கைகூடும்.

Read More
காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

சிவபெருமான், நாக ராஜா கார்கோடகனை தன் கழுத்தில் அணிந்த தலம்

தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காமரசவல்லி. இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், கார்கோடேஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகா.

அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பாண்டவ வம்சத்து பரீட்சித்து மகாராஜா சாபம் ஒன்றினால் பாம்பு கடித்து இறக்க, அவர் மகன் ஜனமேஜயன் பூமியில் உள்ள அனைத்து பாம்புகளும் இறக்க யாகம் வளர்த்தான். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் என்னும் நாகம் ,இத்தலத்து இறைவனை வழிபட்டு யாகத்திலிருந்து தப்பியது. கார்கோடகனின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவனிடம், இத்தலத்துக்கு வந்து தொழுவோருக்குப் பாம்பு கடித்து மரணம் ஏற்படக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினார். சர்ப்ப தோஷம் அவர்களைத் தீண்டாதிருக்க வேண்டும் என்றும் எச்சரித்து, கார்கோடகனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அத்தினமே கடக ராசி, கடக லக்னத்தில் அமைந்த அற்புதமான தினமாகும். செளந்தரேஸ்வரர் என வழங்கப்பட்ட இறைவன், அத்தினம் முதல் கார்கோடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சை கிடைத்த தலம்

தன் கணவன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதால், ரதிதேவி தனக்கு மாங்கல்ய பிச்சை வேண்டி தவமிருந்த தலம். அதனால் ரதிவரம் என்றழைக்கப்பட்டது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரி்ல் ஒவ்வொருஆண்டும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எட்டு நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இன்றளவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடக ராசிக்காரர்கள், நாகதோஷம் உடையவர்கள் வழிபடவேண்டிய கோவில்

செளந்தரேஸ்வரர் வாக்குப்படி 'இந்த காமரசவல்லி பகுதியில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை' என்கின்றனர் ஊர்மக்கள். இந்த வரத்தை சிவபெருமான் தந்த நாள் கடகராசி, கடக லக்னம் அமைந்த தினம் என்பதால் கடகராசிக்காரர்கள், கடக லக்னக்காரர்கள் இந்தத் தலத்துக்கு வந்து செளந்தரேஸ்வரரை தரிசனம் செய்வது சிறப்பு. அவர்களது கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்

திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.

Read More
திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்

தாயை விட அதிக கருணை காட்டும் அம்பிகை

திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ. அமைந்துள்ள தலம் திருத்தியமலை. இறைவன் திருநாமம் ஏகபுஷ்ப பிரியநாதர். இறைவியின் திருநாமம் தாயினும் நல்லாள். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்தலம், தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இறைவனுக்கு ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் வந்ததற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ' தேவ அர்க்கவல்லிப்பூ' என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு. வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில், பல யுகங்களுக்கு ஒரே முறை தேவ அர்க்கவல்லிப்பூ பூக்கும் சிறப்பு மிக்க சுனை, அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை என்னும் திருத்தியமலை. தேவ அர்க்கவல்லிப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் இறைவன் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. இறைவனின் இந்த திருநாமம் அபூர்வமான ஒன்று.

இத்தலத்து இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அளிக்கும் மலரை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறு சற்றே சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.திங்கட்கிழமை தோறும் லிங்கத்திற்கு வில்வ இலை கொண்டும், ஆவுடையாருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 11 வாரங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்தால் எண்ணிய செயல்கள் எல்லாம் நிறைவேறும்.

இக்கோவிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயை விட அதிக கருணை காட்டுவதால் தாயின் நல்லால் என்ற பெயர் பெற்றாள். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க இந்த அம்பிகையை வழிபட வேண்டும். அதனால் பெண்களால் விடப்பட்ட சாபங்கள் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும். திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள், தாயினும் நல்லாள்.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

வெள்ளை நிறத்துடன் காணப்படும் அரிய சிவலிங்கம்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

மூலவர் பால்வண்ணநாதர் ,வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். பாணத்தின் மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. மூலவருக்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு சிவலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட சிவலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,'முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த சிவலிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்' என்றார். இன்றும் பிளவு பட்ட வெண்ணிற சிவலிங்கம் தான் காட்சி தருகிறது.

பிரார்த்தனை

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More