கண்ணாத்தாள் கோவில்
கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்
சிவகங்கையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது கண்ணாத்தாள் கோவில். இக்கோவில் கருவறையில் அன்னை கண்ணாத்தாள் சற்றே தலை சாய்த்து, சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடி காட்சி தருகிறாள். அம்மன், தன் எட்டு கரங்களில் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை தாங்கி இருக்கிறாள்.அம்மனுக்கு கண்ணாத்தாள் என்று பெயர் வரக் காரணம்பல ஆண்டுகளுக்கு முன், நாட்டரசன் கோட்டை ஊருக்கு வெளியில் காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, யாதவர் பலர் நாட்டரசன்கோட்டை வருவார்கள். அப்படி வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தாங்கள் வியாபாரத்திற்கு கொண்டு வந்ததை விற்க முடியாமல் போனதால் அவர்கள் வருமானமின்றி கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. அதனால் இந்த பிரச்சனையை சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். சிவகங்கை மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி மறைந்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில், மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது பள்ளம் தோண்டுபவரின் கடப்பாரையின் நுனி அவர் கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், அம்மன் 'கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' எனப் போற்றப்பட்டாள். பக்தர்கள் கண்ணுடைய நாயகி என்றும் அழைக்கத் தொடங்கினர்.கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலம்கண் பார்வை குறைபாடு உடையவர்கள், நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து அம்மனை தினமும் வழிபட்டு, அம்மனின் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண் பார்வை குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானின் மூன்றாம் படை வீடு
கள்ளவாரணப் பிள்ளையார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில், நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ளவாரணப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால், இந்தப் பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இத்தலம் விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு, விநாயகர் பூஜை செய்யும் முன்பாகவே அதை தேவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி அமிர்தகடேஸ்வரர் ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.கள்ள வாரணப் பிள்ளையாரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிப்பார்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆங்கிலேய கலெக்டர் உணர்ந்த திருச்செந்தூர் முருகனின் தெய்வீக சக்தி
1803ம் ஆண்டில் ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூசிங்க்டன் துரை, ஒரு முறை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளைக் கண்டார். அதில் முருகனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் 16 வகை உபசாரங்களைக் கண்டார். அதில் வெள்ளி விசிறியால் முருகனுக்கு வீசுதலும் ஒன்றாகும்.இதைப் பார்த்த லூசிங்க்டன் துரை, 'உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ' எனக், கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த அர்ச்சகர்கள், 'ஆமாம். எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்' என்றார்கள். பின்னர் லூசிங்க்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து விட்டு ஒரு புதிய துணியை முருகப் பெருமானின்மேல் போர்த்தினார்கள். கொஞ்சநேரத்தில் முருகப்பெருமான்மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.இதற்குக் காரணம், திருச்செந்தூர் கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் மிகவும் சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால், அவர் திருமேனி எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது அதனால் அர்ச்சகர்கள் சந்தனைத்தை அரைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை, காலை நேரத்தில் முருகன் விக்ரகம் மீது முழுவதுமாக பூசி மூடி விடுவார்கள். விக்ரகத்தில் இப்படி பூசப்பட்டிருக்கும் சந்தனம், மாலை நேரத்தில் ஈரத்தினால் சொத சொதவென சிலை முழுக்க வழிந்து இருக்கும்.முருகப்பெருமானின் விக்ரகத்தில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு லூசிங்டன் வியந்தர். வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே `தனக்கு இப்படி ஏற்பட்டதாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தன்க்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவர் கூறிய யோசனையினபடி, முருகப்பெருமானிடம் தான் செய்தது தவறு, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அப்படி செய்தால் நான் என் சொந்த செலவால் உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன் என வேண்டினார். முருகனிடம் வேண்டி விட்டு வீடு திரும்பிய லூசிங்டன் பிரவு, மனைவியின் வயிறு வலி நீங்கியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார். உடனே அவர் முருகனுக்கு வேண்டிக் கொண்டபடி வெள்ளிப் பாத்திரத்தை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.அவர் கொடுத்த வெள்ளிப் பாத்திரம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 'லூசிங்க்டன் 1803' என்று பொறித்திருப்பதை நாம் காண முடியும்.
சாரங்கபாணி கோவில்
மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தாயாரின் திருநாமம் கோமளவல்லி ஆகும். இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்றாற்போல், தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் கோவில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் காலை நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை, தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.
பழமலைநாதர் கோயில்
விநாயகப் பெருமானின் இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமைந்திருப்பது, திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், .கோவில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக, ஆழத்து விநாயகர் வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். இவருக்கு தனியாக கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்."
சுப்ரமணிய சுவாமி கோவில்
இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டு அடுக்காக அமைந்து இருக்கிறது.இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும்போது பழைய சிலையை எடுக்க முடியவில்லை.அதனால் பழைய முருகன் சிலை இருந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலை நிர்மாணித்து அதில் புதிதாக ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோவில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.
கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.
கோடீசுவரர் கோவில்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, ;திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப்போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்,
கோடீசுவரர் கோவில்
சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல்
மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டதால், இத்தல இறைவனின் திருநாமம் 'கோடீசுவரர்’ ' என்றும், ஊர் 'திருக்கோடிக்கா' என்றும் ஏற்பட்டது. மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்றன. ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட பெருமை உடையது இத்தலம்.காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்று வரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள். இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். தலத்தின் தீர்த்தமான் காவிரியில் கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.லோக காந்தா என்ற பெண்மணி, தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவள் தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யம தூதர்கள்,, அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் சென்றார்கள். சிவ தூதர்கள், அவர்களை வழிமறித்தனர். உடனே யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்.சிவபெருமான், தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிட்டார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று கூறி யமதர்மராஜன், இத்தலத்தை விட்டு நீங்கினான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைந்தாள்.
அருணாசலேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானி ன் முதல்படை வீடு
திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்திற்குள்ளேயே அல்லல்போம் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.
வேத நாராயண சுவாமி கோவில்
பாதி மனித உருவமும் மீதி மீன் வடிவமும் கொண்ட பெருமாள்
சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டையைத் தாண்டி, , ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின, நாகலாபுரம் என்ற ஊரில் உள்ளது வேத நாராயண பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் வேத நாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் வேதவல்லித்தாயர். இத்தலத்தில், திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருவது, இத்தலத்தின் சிறப்பாகும். திருமால், தலையிலிருந்து இடுப்பு வரை மனித வடிவமும், இடுப்புக்கு கிழே மீன் வடிவமும் கொண்டுள்ளார்.திருமாலின் தசாவதாரங்களில் முதல் அவதாரம், மச்ச அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன், பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . திருமால் மச்ச வடிவில் அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக, இத்தலத்து பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சமுகேஸ்வரர் கோவில்
ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்கம்
திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே பஞ்சமுகேஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் பஞ்சமுகேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி. கருவறையில் பஞ்சமுகேஸ்வரர் கிழக்கு திசையை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் நான்குபுறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒருமுகமாக கணக்கிடப்பட்டு பஞ்ச முகமாக காட்சி தருகிறார். பஞ்சமுக லிங்கத்தின் ஆவுடையார், ஒ ரு தாமரைப் பீடத்தின் மேல் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். நான்கு திசைகளையும் பார்க்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எந்த திசையில் இருப்பவரையும் இவர் காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில் பஞ்சமுகேஸ்வரர் சன்னதி எதிரிலேயே திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் நாம் இருவரையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இப்படி இறைவன் இறைவி சன்னதிகள் எதிர் எதிரில் அமைந்திருப்பது அபூர்வமானது. இப்படி இருவரையும் தரிசிப்பதால், திருமணம் கைகூடும். மங்கலங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலில் சஷ்டி அப்த பூர்த்தியை செய்வது விசேஷமாகும்.
மீனாட்சி அம்மன் கோவில்
புலிக்கால் விநாயகர்
விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்ட தோற்றத்தில் தான் நாம் தரிசனம் செய்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு வெளியே உள்ள துவாரபாலகர்கள் உள்ள மண்டபத்தில் பெண் உருவ பிள்ளையார் இருக்கிறார். இவர் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி இருக்கிறார். யானை முகமும், கால் முதல் இடை வரை புலியின் உருவமும், இடை முதல் கழுத்து வரை பெண் உருவமும் கொண்டிருக்கிறார். இவருக்கு புலிக்கால் பாதங்கள் இருப்பதால், இவரைப் ‘புலிக்கால் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். வடமொழி நூல்களில் ‘வியாக்ரசக்தி கணபதி’ (வியாக்ரம் என்றால் புலி) என்று இவரைக் குறிப்பிடுகின்றனர். புலிக்கு இணையான சக்தி அளிப்பவர் என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.
வரதராஜ பெருமாள் கோவில்
இந்திரன் இடியாய் இறங்கி பெருமாளை தரிசிக்கும் தலம்
கொங்கு நாட்டில் உள்ள புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள புதன் சந்தையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாயார் குவலய வல்லி. நயன மகரிஷி இந்த மலையில் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்ற தலம் ஆகையால் இது நைனாமலை என்று பெயர் பெற்றது. சுமார் 3,700 படிகள் கொண்ட இந்த மலையின் உச்சியில் உள்ள 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக் கிருகத்தின் உள்ளே ஶ்ரீ வரதராஜப் பெருமாள் பூதேவி, ஶ்ரீதேவியரோடு பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்ட கையில் தண்டம் தரித்து தரிசனம் அளிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திரன் இடியாய் இந்த மலையில் இறங்கி பெருமாளை தரிசிப்பதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆனி முதல் நாளில் இருந்து ஆடி 30ம் தேதி வரை, சூரியஒளி சுவாமி மீது விழுந்து கொண்டே இருப்பது வேறு எங்கும் காண முடியாத வியப்பான அம்சமாகும். இதுபோல் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மூலவர் மீது சூரிய ஒளி படுவது வேறு எங்கும் கிடையாது.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள்.. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோயில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோயிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வெற்றிவேல் முருகன் கோவில்
வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் தலம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஜலகாம் பாறை . வெற்றிவேல் முருகன் கோவில். ஜலகாம் பாறை, ஏலகிரி மலையினை ஒட்டியுள்ளது. சிவலிங்க வடிவில் உள்ள இந்த முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
காமநாத ஈஸ்வரர் கோவில்
தலையாட்டி விநாயகர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகளூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோவிலில் 'தலையாட்டி விநாயகர்' தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். கோவில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோவிலை கட்டும் பணிகளை தொடங்கும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, இவ் விநாயகரிடம் வந்து, கோவில் கட்டும் பணிகள் சரியாக நடந்து இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கோவிலைக் கட்டியிருக்கிறாய் என சொல்லும் விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.
லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
வியாழ சோமேஸ்வரர் கோவில்
முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தரும் தலம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. வியாழ சோமேஸ்வரர் கோவில். நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் 'வியாழ சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'சோமேஸ்வரர்' என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும்.இத்தலத்து முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார் அவர் தொங்க விட்ட நிலையில் இருக்கும் காலில் பாதரட்சை அணிந்து இருக்கிறார். முருகப்பெருமானின் இத்தகைய கோலத்தை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத.