விருத்தபுரீசுவரர் கோயில்
ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம்
அறந்தாங்கியில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புனவாசல் தலத்தில, ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
கோபாலகிருஷ்ணன் கோயில்
தேவலோக பாரிஜாத பூச்செடி நடப்பட்ட திவ்ய தேசம்
சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரின் 11 திவ்யதேசங்களில் ஒன்று திருக்காவளம்பாடி காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம். மூலவர்:கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி, கிருஷ்ணனால் பூலோகத்தில் நடப்பட்ட இடம் தான் திருக்காவளம்பாடி
வரலட்சுமி விரதம்.
சகல செல்வங்களையும் அள்ளித் தரும் வரலட்சுமி அம்மன்
சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியத்திற்காகவும் மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காகவும், மகாலட்சுமிக்கு செய்யும் வழிபாட்டு பூஜையே இந்த வரலட்சுமி விரதம் ஆகும். ஒரு காலத்தில் மகத தேசத்தில், குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி என்பவள் வசித்து வந்தாள். அவள் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும் பெற்றிருந்தாள். தன் கணவருக்கும் அவரின் பெற்றோருக்கும் பணிவிடை செய்வதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தாள். அவள் குடும்பம் வறுமையில் வாடினாலும், இறைவனிடத்தில் மிகுந்த பக்தி செலுத்தினாள். சாருமதியின் மிகுந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு நாள் அவள் கனவில் தோன்றி, 'உன்னுடைய பக்தி என்னை நெகிழச் செய்து விட்டது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் வந்து சேரும்' என்று கூறி மறைந்தாள். மகாலட்சுமி கூறியபடி சாருமதி மேற்கொண்ட விரதமே, வரலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தினால் சாருமதி சகல சௌபாக்கியங்களையும் அடைந்து சிறப்புற வாழ்ந்தாள்.
ரவீஸ்வரர் கோயில்
சூரிய ஒளிக்கதிர்கள் மூன்று வேளையும் சிவலிங்கத்தை தழுவும் ஆலயம்
சென்னை வியாசர்பாடியிலுள்ள ஐந்நூறு ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் ஆலயத்தில், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தைத் தழுவும். சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது மாலை போல விழுகின்றன.
சிவானந்தேசுவரர் கோயில்
முருகப்பெருமானின் தோஷம் நீங்கிய தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது.பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. மூலவர் 'பிரணவேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார். பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் அதிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை
உத்தராபதீசுவரர் கோயில்
கணபதி சிவபெருமானை வழிபட்ட தலம்
கணபதி, கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான, கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆனதனால் இத்தலத்திற்கு 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. .கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்
பிரத்தியங்கிரா கோயில்
சிம்ம முகத்துடன் கூடிய அம்மன்
கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், அருள்பாலிக்கிறாள். இப்பிரத்யங்கரா தேவி, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.மனதில் தைரியம் பிறக்கவும், பில்லி,சூனியம்,தொல்லைகளில் இருந்து விடுபடவும், பக்தர்கள் இந்த தேவியை வணங்குகிறார்கள். இந்த கோவிலில் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தரும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும்தான் பிரசாதமாகத் தருவார்கள, விபூதி பிரசாதம் தரமாட்டார்கள, திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 'திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம்) நேரம்தான் நடைபெறும். இதற்கு வைணவர்கள் உட்பட அனைவரும் விபூதி அணிந்தே வருவார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டும்தான.சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும். உபரிசரவசு என்ற மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்படுகின்றது, உபரிசரவசு சிறந்த சிவபக்தன. தினமும் விடியற்காலை வேளையில் சிவபூஜை செய்வது அவன வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் வான்வெளியில் பறந்து வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார. பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தளத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இத்தலத்தில் கருடன் இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
தில்லை நடராசர் கோயில்
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்
சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தரும் அறுபடைவீடு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கோவிலின் கருவறையில் கல்யாண திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.முருகப் பெருமான். அமர்ந்த நிலையில் இடது கையை தொடையில் அமர்த்தி, வலது கையால் அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் நாரத முனிவர் ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில், முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறார். கருவறையில் முருகனின் இடப்பக்கம், தெய்வானை ஒரு கால் மடக்கி அமர்ந்து, கைகளில் மலருடன் காட்சி தருகிறார். இக்கருவறையின் மேலே முருகனைச் சுற்றி சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்ரி, வித்தியாதரர்கள்m இந்திரன் முதலானோர் காட்சி தருகின்றனர். தெய்வானை அருகில் திருமனச் சடங்கினை நடத்தும் நான்முகன், கலைமகளுடன் சிறிய உருவில் உள்ளார். முருகன் பாதத்திற்குக் கீழ் மேடையில், யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
சத்தியவாகீசுவரர் கோயில்
செவிசாய்க்கும் பிள்ளையார்
திருச்சிக்கு அருகில் இருக்கும் தேவாரப் பாடல் பெற்ற அன்பில் தலத்தில், பிள்ளையார் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் இருக்கிறார. கொள்ளிடத்துத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டதால், இவ்விநாயகர் 'செவிசாய்க்கும் பிள்ளையார்' எனப் பெயர் பெற்றார். பக்தர்களின் குறைகளைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்த்து வைப்பார் என்பதும், இப்பெயர் வரக் காரணமாகும்.
வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தரும் வனதுர்கா பரமேஸ்வரி.
கதிராமங்கலம் தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வனதுர்கா பரமேஸ்வரி, முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம். சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே வனதுர்கா பரமேஸ்வரியை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வனதுர்கா பரமேஸ்வரிக்கு அர்ச்சனை செய்யும் போது அவளது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகின்றன.இது இன்றும் நடக்கும் அதிசயமான நிகழ்வாகும்.
சௌரிராஜ பெருமாள் கோயில்
மும்மூர்த்தியாக தரிசனம் தரும் பெருமாள்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் வைகாசி பிரும்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று, பெருமாள் மும்மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். முதலில் பெருமாளாகவும, அன்றிரவு பிரம்மாகவும், விடியற்காலையில் சிவனாகவும் காட்சி தருகிறார். வேறு எந்த திவ்யதேசத்திலும் இப்படியொரு திருவிழா நடைபெறுவதில்லை.
ஐயாறப்பர் கோவில்
திருவையாறு ஐயாரப்பன் கோவில் தட்சிணாமூர்த்தியின் தனிச் சிறப்பு
திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவரது மேல்நோக்கிய வலது கரத்தில் கபாலமும், இடது கரத்தில் சூலமும் தாங்கி இருக்கிறார். கீழ்நோக்கிய வலது கரத்தில், சின்முத்திரை, இடது கரத்தில் சிவஞானபோதம் காணப்படுகின்றது. இந்த தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் ஆமை இருக்கின்றது. திருவடியானது ஆமையை மிதித்திருப்பது புலன் அடக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
படிக்காசுநாதர் கோயில்
சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான்
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருஅரிசிற்கரைபுதூர். தற்போது 'அளகாபுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. சூரபதுமனை அழிக்க முருகப்பெருமான் போருக்குக் கிளம்பியபோது, மகாவிஷ்ணு அவருக்கு தன்னுடைய சங்கு, சக்கரத்தைக் கொடுத்ததால், இத்தலத்து முருகக் கடவுள் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
கச்சேரி விநாயகர் கோயில்
கச்சேரி விநாயகர்
மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும். விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில், இவருக்கு சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர்அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.
மீனாட்சி அம்மன் கோயில்
ஆங்கிலேய கலெக்டரின் உயிரைக் காப்பாற்றிய மீனாட்சி அம்மன்
1812 முதல் 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர், ரவுஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர், அவர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக்கொண்டார். தங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தும் அவரை மதுரை மக்கள்m பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.
அவர் தினமும், தன்னுடைய குதிரையில் ஏறி, மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்த பிறகே, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அந்த அளவுக்கு அவர் அம்பிகையிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
ஒருநாள் இரவு மதுரையில், இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. மக்களுக்கு என்ன இடையூறு நேருமோ என்ற கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் ரவுஸ் பீட்டர். நள்ளிரவு வேளையில், மூன்று வயதே ஆன சிறுமி ஒருத்தி அவருடைய அறைக்குள் நுழைந்தாள். தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து வந்தாள்.
சிறுமியும், கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய சிறுமி யார் என்பதும், உள்பக்கமாகப் பூட்டிய அறைக்குள் அவள் எப்படி வந்தாள் என்பதும் தெரியாமல் திகைத்த கலெக்டர், அந்த சிறுமிக்கு நன்றி சொல்லத் திரும்பினார். அதற்குள் அந்தச் சிறுமி தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல் அங்கிருந்து சென்றுவிட்டாள். சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர், அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்ல ஓடினார். கலெக்டரால் அந்தச் சிறுமியைப் பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி, மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.
தன்னைக் காப்பாற்றியது அம்பிகை மீனாட்சிதான் என்பதை புரிந்துகொண்ட கலெக்டர் ரவுஸ் பீட்டர், மீனாட்சி அம்மனுக்கு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்கப் பாதணிகளைக் (குதிரை சவாரியின் போது பயன்படுத்தப்படும் Stirrups) காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.இன்றும் இந்த தங்கப் பாதணிகளை நாம் மீனாட்சி அம்மன் கோவிலில் காணலாம்.
ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்
கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கநாதரின் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது, ஸ்ரீரங்கநாதரின் அந்த விக்கிரகமானது, இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது ஸ்ரீரங்கநாதரின் அழகில் மயங்கி, அவருக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக, ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும், அவளுக்காக ஸ்ரீ ரங்கநாதர், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.
தாணுமாலயன் கோயில்
இந்திரன் நள்ளிரவில் பூஜை செய்யும் ஆலயம்
நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரத்தில் அருளும் தாணுமாலயன் ஆலயத்தில், தினமும் நள்ளிரவு இந்திரன் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் இக்கோவிலில் முதல் நாள் மாலை பூஜை செய்யும் அர்ச்சகரை, மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அர்ச்சகர்களை நியமிக்கும்போதே, தாங்கள் மூலவர் சன்னதியில் கண்ட காட்சிகளை வெளியில்சொல்லக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள்.
மகாதேவர் கோயில்
நிறம் மாறும் அதிசய விநாயகர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில், சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார, ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது. இவர் நிறம் மாறுவதற்கேற்ப அங்குள்ள அரச மரமும் கிணற்று நீரும் நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் உள்ள போது, இங்குள்ள கிணற்று நீர் கருப்பு நிறமாக மாறுகிறது. விநாயகர் கருப்பு நிறமாக மாறும் போது, கிணற்று நீர் நுரை நுரையாக பொங்கி வெண்மையாக மாறி விடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்த கிணற்றில் தரையை தெளிவாக பார்க்க முடியும்.