திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்

ஆஞ்சநேயர் தன்னுடைய குண்டலத்தை படைத்து சிவபெருமானை வழிபட்ட தேவார தலம்

மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.

ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, இறைவன் குந்தளேசுவரர் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவபெருமானே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவபெருமானே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே இவரை, 'சிவஆஞ்சநேயர்' என்றும், 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.

ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை இமயமலைக்கு அனுப்பினார். ஆஞ்சநேயரும் சிவலிங்கம் எடுத்து வரச் இமயமலைக்குச் சென்றார். இதனிடையே ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால், சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.

சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய ஆஞ்சநேயர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவபெருமானுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் 'குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
Next
Next

சளுக்கை சுகர் நாராயணப் பெருமாள் கோவில்