திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் கமலாம்பிகை

தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கமலாம்பிகை

திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.

கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் ராஜமாதங்கியும், நின்றகோலத்தில் சாமரம் வீசும் அலைமகள், கலைமகள் சிற்ப வடிவில் காட்சியளிக்கிறார்கள். சங்கநிதி, பதுமநிதியே இங்கு துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.

தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கமலாம்பிகை

கருவறையில் கமலாம்பிகை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் அமர்ந்துள்ளாள். அம்பிகை, இந்த மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, யோகினியாக தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார்.

தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார்.

இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும், பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன

லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாகவும், ஸ்ரீ வித்யா உபாசனையின் யந்திர நாயகியாகவும், கமலாம்பிகை போற்றப்படுகிறாள். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார். 

இங்குள்ள அம்பிகையை தரிசித்தால் பாரெங்கும் உள்ள 51 சக்தி பீடங்களை தரிசித்த முழு பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும். 

 

திருவாரூர் தஞ்சையில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Previous
Previous

செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்

Next
Next

திருமீயச்சூர் மேகநாதர் கோயில்