திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்

பெருமாளுக்கு வித்தியாசமாக வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்

 தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் கோவில்

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ஷீரநாயகித்தாயார்,ரங்கநாயகித்தாயார். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் தல விருட்சம் வில்வம். அதனால் இத்தலத்தில் வித்தியாசமாக பெருமாளுக்கு, சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

மூலவர் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள், திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி என்றால் சமஸ்கிருதத்தில் பால் என்று பொருள்) எழுந்தருளியுள்ள கோலத்தில், காட்சி அளிக்கிறார். அவர் சயன கோலத்தில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கிய பாதங்களுடன் மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி முறையே அவரது தலை மற்றும் பாதங்களில் அமர்ந்துள்ளனர்.

மேலும் பிரம்மா அவரது தொப்புளிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம். அவரது திருமேனி மணல், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் பல மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட உருவமாகும். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை, தைல காப்பு (சிறப்பு எண்ணெய்) மட்டுமே பூசப்படும்.

தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் கோவில்

ஒருமுறை, விஷ்ணு பகவான்  தனது பக்தர்களுக்காக, மகாலட்சுமியைத் தனியாக விட்டுவிட்டு, சிறிது நேரம் பூலோகத்திற்கு வந்தார். விஷ்ணு இல்லாமல் மகாலட்சுமி ஒரு நொடி கூட தனியாக இருக்க முடியாது. எந்த நேரத்திலும் மகாவிஷ்ணுவை பிரிந்து தனிமையில் இருக்கக்கூடாது என்பதற்காக, அவள் வருத்தமடைந்து இந்த இடத்தில் தவம் செய்தாள்.

இந்த தலத்து தீர்த்தத்தில் மகாலட்சுமி நீராடி, வில்வ மரத்தடியில் தவம் செய்து இறைவனின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் வரம் பெற்றாள். எனவே, தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த, இக்கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏதேனும் தவறான புரிதல்கள் (அல்லது) அவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.  எனவே, திருமணமான தம்பதியினருக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலோ அல்லது பிரிந்திருந்தாலோ, தாயாரை இங்கு வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும்.

 

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது திருலோக்கி.

Previous
Previous

மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில்

Next
Next

திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில்