மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில்

ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி

திருமணத்தடை நீக்கும் மாப்பிள்ளை சுவாமி விநாயகர்‍ ‍

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது வெள்ளீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த வெள்ளீசுவரர் சிவன் கோவில்.

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 7 சிவ தலங்கள் உள்ளன, இந்த கோவில்கள் அனைத்தும் திருமயிலை சப்த ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றன. 

‍மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சப்த சிவ தலங்களில் வெள்ளீசுவரர்  கோவிலும் ஒன்று.  மற்ற சிவத்தலங்கள் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், விருபாட்சீசுவரர் கோயில், வாலீசுவரர் கோயில்,  மல்லீசுவரர் கோயில் ஆகியவை ஆகும்.

அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை கொடுத்த தலம் இது என்பதால், மூலவருக்கு வெள்ளீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால், இக்கோவில் கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது.

‍இக்கோவிலில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். இவருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. அவருக்கு முன்பாக  செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி  இருக்கிறார்.

‍ இப்படி ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இந்த ஒரு தலத்தில் மட்டும்தான். இந்த மாப்பிள்ளை சாமிக்கு நான்கு மாலைகள் கொண்டு வந்து பூஜை செய்து, ஒரு மாலையை பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு சென்றால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.‍ ‍

 
Previous
Previous

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

Next
Next

திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்