தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) சீனிவாசப் பெருமாள் கோவில்
அமிர்த கலசம் ஏந்திய ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்
திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தில்லை ஸ்தானம் (திருநெய்த்தானம்) என்ற கிராமத்தில் அமைந்துள்ள வைணவத் தலம் சீனிவாசப் பெருமாள் கோவில். கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். இதன் பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம். சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.
வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
படங்கள் உதவி : திரு. ஜெயசீலன், திருவையாறு
வலது கையில் அமிர்த கலசத்தை ஏந்தி இருக்கும் அனுமன்