ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

பைரவர் இரட்டை வாகனத்துடன் இருக்கும் அரிய தோற்றம்

கல்வியில் சிறக்க அருளும் இரட்டை வாகன பைரவர்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

பொதுவாக சிவாலயங்களில் பைரவர் தெற்குத் திசை நோக்கி தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரரின் சன்னதி மண்டபப் பகுதியில், மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பைரவர் தனது வாகனமான நாயுடன் தான் காட்சி அளிப்பார் . ஆனால், இக்கோவிலில் வலதுபுறத்தில் நாய் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். இந்த இரட்டை வாகன பைரவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் இந்த இரட்டை வாகன பைரவரை வழிபட்டு தங்கள் நாவில் தேன் தடவிச் சென்றால் அவர்களது குறைகள் நீங்கும்.

 
Previous
Previous

தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) சீனிவாசப் பெருமாள் கோவில்

Next
Next

வள்ளிமலை முருகன் கோவில்