எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்

பிராணாயாமம் செய்து கொண்டு, காயத்ரி மந்திரம் கேட்கும் தோரணையில் இருக்கும் அபூர்வ நந்தி

ஆபரண அலங்காரங்களுடன் இருக்கும் மிகவும் அழகான நந்தி

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இக்கோவிலில் அமைந்திருக்கும் நந்தி, வேறு எந்த கோவிலிலும் காண முடியாத பல தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக விளங்குகின்றார். இந்த விசித்திரமான நந்தியில் அழகான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. இந்த ஆபரணங்கள், ஆடைகள் அனைத்தும் அதன் உடலில் அதில் செதுக்கப்பட்டுள்ளன.

நந்தி கழுத்தில் விரிவான அலங்காரங்களை அணிந்துள்ளார். ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலைகள், ஒரு இரும்புச் சங்கிலி, சலங்கை மற்றும் மணிகளால் செய்யப்பட்ட மாலை ஆகியவை அவற்றில் அடங்கும். நான்கு வேதங்களைத்தான் அவர் தனது கழுத்தில் ஆபரணங்களாக அணிந்துள்ளார். அவரது நெற்றியில் ஒரு அழகான நெத்தி சுட்டி அலங்கரிக்கிறது. மேலும் அவரது உடலில் அழகாக செதுக்கப்பட்ட வஸ்திரம் (சால்வை) மற்றும் ஒரு ஒட்டியானம் (இடுப்பு அலங்காரம்) அமைந்துள்ளது.

இந்த நந்தி 'ரஜோ குண' நந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தேவர் அமர்ந்திருக்கும் தோற்றமானது, 'பிராணயாம கோலம்' (சுவாசப் பயிற்சி செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. மேலும் நந்தியின் காதுகள் வழக்கத்திற்கு மாறாக நிமிர்ந்த வடிவத்தில் கூர்மையாக செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நந்திகேசுவரர் பிராணயாம செய்து, காயத்ரி மந்திரத்தைக் கேட்கும் தோரணையில் இருக்கின்றார்.

நந்தியின் பற்களின் வரிசை கூட மிகவும் துல்லியமாக, மிகச்சிறிய விவரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி வலது பக்கத்தில் நாக்கை நீட்டி நாசியை அடைந்து காணப்படுகிறது. ஒரு முன் கால் பின்னோக்கி மடிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீட்டிய நிலையில் உள்ளது. பின் கால்களில், ஒன்று மடிக்கப்பட்டுள்ளது, மற்றொரு கால் அதன் வயிற்றுக்குக் கீழே செல்கிறது, இந்த கால் மறுபுறம் நீட்டிக் காணப்படுகிறது. அதேபோல் வால் வயிற்றுக்குக் கீழே சென்று அதன் இடது பக்கத்தில் நீண்டுள்ளது.

சுருங்கச் சொன்னால், இந்த நந்தி தேவர் நமது முன்னோர்களின் சிற்பக்கலை திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அரிய காட்சி (22.06.2025)

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகப்பெருமான், தேவ மயில் மற்றும் திருவாசி

https://www.alayathuligal.com/blog/ezhichur22062025

தகவல், படங்கள் உதவி : திரு. K.கிருஷ்ணகுமார், ஆலய நிர்வாக குழு தலைவர்

 
Next
Next

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்