எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்

முருகப்பெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அரிய காட்சி

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகப்பெருமான், தேவ மயில் மற்றும் திருவாசி

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

பொதுவாக, முருகன் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்கும். முருகன் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் கோவில்கள் அரிதானவை. இக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான், ஆறு முகங்களோடு வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் காட்சி அளிப்பது மற்றும் ஒரு தனி சிறப்பாகும்.

ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார். முருகன் இத்தலத்தில் சாந்த ரூபத்தில் இருப்பதால் இக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவது கிடையாது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷம் நீங்க, இத்தலத்து முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறார்கள்.

தகவல், படங்கள் உதவி : திரு. K.கிருஷ்ணகுமார், ஆலய நிர்வாக குழு தலைவர்

 
Next
Next

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்