உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்

பெருமாள் கருவறைக்குள் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர்

அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் தனிச்சிறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில். கருவறையில் முதலவர் சீனிவாச பெருமாள் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பம்சம்.

ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மூலவர் சீனிவாச பெருமாள், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், 'எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்' என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோவில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.

 
Previous
Previous

சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்

Next
Next

வரலட்சுமி விரதம்