சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்

பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து சிறிய சிங்கம் வெளியே வருவது போன்ற அதி அற்புதமான வேலைப்பாடு உள்ள கோமுகம்

திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின் திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.

கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின் கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

 
Next
Next

உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்