நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்
நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தரும் அபூர்வ தோற்றம்
துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி இருக்கும் அரிய காட்சி
சென்னை பூந்தமல்லியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நசரத் பேட்டை காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.
காசியில் உள்ளது போல இத்தலத்து விசுவநாதரின் சிவலிங்கத் திருமேனி மிகவும் சிறியது.கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது ஒரு அரிய காட்சியாகும்.
இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். கார்கோடக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்கோடக மகரிஷியின் ஜீவசமாதி அருகிலுள்ள பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் இருக்கின்றது.
இந்தக் கோவிலில் நந்தி பகவான் தனது தலையை வலது பக்கம் சற்று சாய்த்து, புன்னகை தவழும் முகத்துடன் தனது கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். அவரது திருமேனியை சலங்கை மணிகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது மடிந்த இடது முன் பாதத்தின் கீழ் பாம்பு ஒன்று காட்சி அளிக்கிறது. இங்குள்ள பாம்பு, இத்தலத்தில் முக்தி பெற்ற கார்கோடக மகரிஷியைக் குறிக்கின்றது. இப்படி நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அபூர்வ தோற்றமாகும்.
நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்
சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.
கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்
கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.