கோயம்புத்தூர் தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோவில். இந்த அம்மன் திப்பு சுல்தான்படை வீரர்களின் அம்மை நோயை குணப்படுத்தியதாக வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உண்டு.
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, , காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவில்
வேறு எந்த தலத்திலும் இல்லாத அபூர்வ, பஞ்சலோகத்திலான மூலவர் பெருமாள் திருமேனி
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒரு பகுதியான சிங்காநல்லூரில் அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் கோவில். இக்கோவில் 'ஸ்ரீ த்ரி விக்கிரமநாராயண சுவாமி திருக்கோயில்' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று. இக்கோவிலின் நுழைவாயிலில் பெரிய அளவிலான சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் வாயிற்காப்பாளர்களாக காட்சியளிக்கிறார்கள்.
1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கரிகால் சோழன் மன்னரால் கட்டப்பட்டது. போர் சம்பந்தமாக கரூர் வந்த கரிகால் சோழ மன்னன், வெள்ளலூர் வந்த போது, அருகிலுள்ள சிங்காநல்லூர் ஊரிலுள்ள மக்களின் நலன் கருதி, சிங்காநல்லூர் பகுதியை அவர்களுக்குச் சாசனம் செய்து விட்டு, இக்கோவிலையும் நிர்மாணித்தான். இது சம்பந்தமான குறிப்புகள் மூலவர் விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கருவறையில் மூலவர் உலகளந்த பெருமாள் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் மூலவர், இரு கைகள் அபய முத்திரைகளுடனும், மற்ற ஆறு கைகள் ஒவ்வொன்றும் முறையே சக்கரம், கதை, அம்பராத்தூணி, வில், கேடயம், பிரயோகச் சக்கரம் ஆகியவை கொண்டு அபயம் அளிக்கும் வகையிலும் தோற்றமளிக்கிறார். இந்தப் பெருமாளின் தனிச்சிறப்பு என்னவென்றால் இவரது திருமேனி பஞ்சலோகத்தால் (ஐம்பொன்னால்)உருவாக்கப்பட்டதான். இப்படி பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்ட மூலவரை நாம் எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது. மேலும், உற்சவர் உலகளந்த பெருமாளும் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் உற்சவர் தாயார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி எழுந்தருளி இருக்கின்றனர்.
கோவிலின் தல வரலாறு
பூமியில் மன்னர் மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவம் கொண்டு, யாகம் வளர்த்து தானம் செய்த போது, அவரது ஆணவத்தை அகற்ற, வாமனர் (இளங்கலை பிராமணர்) அவதாரம் தரித்த மகாவிஷ்ணு, அவரிடம் தானமாக உலகில் மூன்று அடிகள் கேட்க, தன்னிடம் தானம் கேட்க வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறியாத மகாபலிச் சக்கரவர்த்தி, தானமாக மூன்று அடிகளை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு பணிக்க, அவ்வாறே மகாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொண்டு, முதல் படிநிலை கொண்டு பூவுலகம் முழுமையும், இரண்டாம் படிநிலை கொண்டு விண்ணுலகம் முழுமையும் ஆட்கொண்டு, மூன்றாவது படிநிலைக்கான இடத்தை மகாபலியிடம் வினவ, தன் தவறை அப்போதுதான் உணர்ந்த மகாபலி, மகாவிஷ்ணுவிடம் தன் தலைமேல் மூன்றாவது அடியை வைக்கப் பணித்து, அதனால் பாதாளம் நோக்கி வீழ்ந்தார் என்பது புராணம். மண்ணுக்கும் விண்ணுக்கும் கால்களை நோக்கிய கோலத்தில் உலகளந்த பெருமாள் ஆகவும், மகாபலிச் சக்கரவர்த்திக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து மூவுலகம் ஆட்சி புரியும் த்ரி விக்கிரமநாராயண சுவாமி ஆகவும் அருள்பாலிக்கும் இடமே சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இத்திருத்தலம்.
திருவிழாக்கள்
ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். வைக்குண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக இங்கு கொண்டாடப்படும்.
கோவை கோனியம்மன் கோவில்
தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்
கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோனியம்மன் கோவில். இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இவ்வூர் மக்கள் இந்த அம்மனை என்று 'கோவையின் அரசி' எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும். கோனியம்மனுக்கு வலப்புறத்தில் நவக்கிரக சந்நிதியில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
நவக்கிரக சன்னதிகளில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார். இங்குள்ள சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி, சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருக்க, அவரது இரு மனைவிகள் உஷா, பிரத்யுஷா உடன் இருக்கின்றனர். சந்திரபகவான், அவரது மனைவிகள் கிருத்திகா, ரோகிணி ஆகியோருடனும், மற்ற நவக்கிரகங்கள் செவ்வாய் பகவான் - சக்திதேவி, புதன் பகவான் - ஞானதேவி, குருபகவான் - தாராதேவி, சுக்கிர பகவான் - சுகீர்த்தி, சனி பகவான் -நீலாதேவி, ராகுபகவான் - சிம்ஹி , கேதுபகவான் - சித்திரலேகா ஆகியோர் தம்பதி சமேதராக காட்சி அளிக்கின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்..
முந்தி விநாயகர் கோயில்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்
கோயம்புத்தூர் டவுனில் புலிக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள முந்தி விநாயகர்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆவார்.இவர் 10 அடி 10 அங்குலம் உயரத்துடனும்,11அடி10 அங்குலம் அகலத்துடனும்,8 அடி சுற்றளவுடனும்,190 டன் எடை உள்ளவராகவும் இருக்கிறார்.இவர் வலம் சுழித்த தனது தும்பிக்கையில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறார்