பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில்

பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு

சூரியனுக்கான பரிகார தலம்

சென்னையில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் புஷ்பவல்லி. இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.

ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான இந்தக் கோவிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடப்பது சிறப்பு.

இத்தலத்து மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதனால் இக்கோவில் சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும்.

தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

மூன்று திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளியிருக்கும் தலம் (12.9.2022)

https://www.alayathuligal.com/blog/d253g6ywrmzx2cpkrtjy8n8zstyym3

 
Next
Next

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்