ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கண்ணன் கோவில்
உற்சவர் கண்ணனுக்கு கொலுசு சார்த்தி வழிபடும் தனிச்சிறப்பு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய கோவில் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும், பாடுவதில், ஆடுவதில், இசைக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள். பக்தர்கள் உற்சவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாளில், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள் அன்று, சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம் (26.08.2024)
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை