
திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்
வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் பிரம்மநாயகி. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீசுவரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும்.
இக்கோவிலில், பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் கோவில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.