
மானூர் பெரியாவுடையார் கோவில்
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாவுடையார் கோவில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோவில்.இத்தலத்து மூலவர் பெரியாவுடையாருக்கு பிரகதீஸ்வரர் என்ற திருநாமும் உண்டு. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஏழு ஜன்மங்களின் பாவங்கள் கூட விலகும் என்பது ஐதீகம்.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காததால், கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும் படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடைபெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார், பெரியநாயகி ஆனது.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார். எப்படியென்றால், அவரது உடல் மட்டும் முழுக்க கருப்பு நிறத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் கூடிய நிலையில் கல்லால் அமைந்திருக்கின்றது. இப்படி இருவேறு வண்ண நிறத்தில் காட்சியளிக்கும் நடராஜர் சிலையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. இவர் தனித்தே அருள்பாலிக்கிறார்.
அபூர்வ கருப்பு வெள்ளை நடராஜர்: திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜன்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இறைவன் பெரியாவுடையாரை, பிரகதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள நடராஜ சுவாமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படியெனில், உடல் முழுக்க கருப்பு வண்ணத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் அமைந்த நிலையில் கல்லில் வடிக்கப்பட்டவர். நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. தனித்தே அருள்பாலிக்கிறார்.
பொதுவாக பிரதோஷ நாயனார் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் காணப்படுவார். ஆனால் இங்குள்ள பிரதோஷ நாயனார் தாண்டவ நிலையில், கையில் டமருகத்துடன் காணப்படுகிறார்.

மானூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
பங்குனி உத்திர திருவிழா - வாழைப்பழம் சூறை வீசும் விநோத நேர்த்திக்கடன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மானூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடைபெறும் தேர் திருவிழாவும், அப்பொழுது பக்தர்கள் வாழைப்பழம் சூறை வீசும் நிகழ்ச்சியும், இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் மிகவும் பிரசித்தம்.
பங்குனி உத்திர திருவிழா முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மூலவர் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோர் சிறப்பு பூஜைகளுக்கு பின் ரதத்தில் எழுந்தருளுவார்கள். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ரத உற்சவம் நடைபெறும். தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் வாழைப் பழம் மற்றும் தானியங்கள், மிளகாய் வத்தல் ஆகியவற்றை சூறை வீசும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். சூறை வீசிய பழங்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் மிகவும் ஆர்வமுடன் எடுத்துச் செல்வார்கள். இந்த சூறை வீசும் நிகழ்ச்சிக்கு ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வார்கள்.