மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்

சங்கும், சக்கரமும் இடம் மாறி இருக்கும் பெருமாளின் வித்தியாசமான தோற்றம்

சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

கருவறையில் மூலவர் ராஜகோபாலர் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் கோவில்களில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்திருக்கும் கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது.

சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Read More