சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்

சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கும் அபூர்வ காட்சி

சீர்காழியில், சிரபுரம் பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வரமுடையார் கோவில். இறைவியின் திருநாமம் பொன்நாகவள்ளி. இக்கோவில் 1100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ராகு பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டுத் தனது தோஷங்களை நீக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான் ராகு பகவான் கிரக பதவி அடைந்தார். இத்தலத்தில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பது, ஒரு தனி சிறப்பாகும்.

பொதுவாக எந்த சிவன் கோவிலிலும் இல்லாதவாறு, இங்கு ராகு பகவான் சன்னதியில் சனி பகவான் தனது மனைவி நீலாதேவியுடன் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், இக்கோவிலில் சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.  இப்படி சனி பகவான் தன் மனைவியுடனும், ராகுவுடனும் இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சி ஆகும்.

 இக்கோவில் சிறந்த ராகு, கேது பரிகார தலமாகும். ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4.30 மணியளவில் இக்கோவிலில் உள்ள விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோரை முதலில் வணங்க வேண்டும்.

பின்னர் ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல் நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும்.

அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறை அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும்.

இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More