
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோவில்
தீபாராதனை செய்யும்போது சிவலிங்கத்தில் தெரியும் பிரகாசமான தீப ஒளி
சகலவிதமான நோய்களை தீர்க்கும் அபிஷேகத்தேன்
செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி. இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இடையன் வடிவில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு இடைச்சுரநாதர் என்ற திருநாமும் உண்டு.
இத்தலத்து மூலவர் சதுரபீட ஆவுடையாரின் மேல் சுயம்பு லிங்கத் திருமேனியாக எழுந்தருளி உள்ளார் . இந்த சிவலிங்கத் திருமேனியானது மரகத கல்லால் ஆனது. சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. சிவலிங்கத்தில் தெரியும் ஜோதியானது பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம். தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

ஞானபுரீஸ்வரர் கோயில்
அம்பாள் நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில் காட்சி தரும் தலம்
செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி.
பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று இணைத்து நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் திருவடிசூலம் தலத்தில் அம்பாள் இமயமடக்கொடி, தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.
சிவபெருமான், இடையன் வடிவில், திருவடிசூலம் வந்த திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர்.
காலில் ஊனம் உள்ளவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.