உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
மோதக அஸ்த விநாயகர்
ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் ஏந்திய விநாயகரின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் ஏகாம்பரநாதர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும், பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார்.
இக்கோவிலில் கன்னிமூலையில் எழுந்தருளி இருக்கும் கணபதிக்கு மோதக அஸ்த விநாயகர் என்று பெயர். இவருக்கு வரசித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்த மோதக அஸ்த விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தனது நான்கு கரங்களில் தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்தில், மோதக அஸ்த விநாயகர் தனது ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் (பிடி கொழுக்கட்டை) ஏந்தி உள்ளார். இப்படி ஐந்து கரங்களிலும் மோதகம் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இவருக்கு எதிரில், வழக்கமான இவருடைய வாகனமான மூஞ்சூறுடன், யானையும் உடன் இருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும்.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
தலையில் ஜடாமுடியுடன் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இருக்கும் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.
இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட திருமேனி உடைய அவர் தனது தலையில்,வழக்கமான கிரீடத்திற்குப் பதிலாக, ஜடாமுடியுடன் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களும் இருக்கின்றன.
கருவறையில் சிவபெருமானும் திரிபுரசுந்தரியும் எழுந்தருளி இருக்கிறார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார். அதனால் அவரது வலது கீழ் திருக்கரம் பூஜை செய்யும் பாவனையில் இருக்கின்றது.
மற்ற முருகன் கோவில்கள் போல் வள்ளியும், தெய்வானையும் அவருக்கு அருகில் இல்லை. மாறாக இந்தக் கோவிலில், வள்ளியும் தெய்வ யானையும் இணைந்து கஜவள்ளியாக தனிச்சந்நதியில் இருக்கிறார்கள்.
இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது, இந்திரன் யானையை முருகனுக்கு பரிசாக அளித்தான். முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவானது.
உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள்கள் அருளும் தலம்
செங்கல்பட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் உத்திரமேரூர். இந்த ஊரில் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 9 பெருமாள்களை தரிசிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் எங்கு வசிக்கிறார்களோ. அங்கே நவமூர்த்திகள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது மரீசி சம்ஹிதை எனும் ஞான நூல். அந்த வகையில் ஒன்பது பெருமாள்களுடன் அமைந்த கோயில் இது ஆகவே, நவநாராயணர் கோயில் என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள்.
இந்தக் கோயிலில் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்றாக மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதானக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும் திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது.
கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம். அதே தனத்தில் பிராகாரத்தில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி முறையே அச்சுத வரதர், அதிருத்த வரதர், கல்யாண வரதர் அருன்கிறார்கள். ஆக கீழ்த் தளத்தில் 4 பெருமான்கள் அருள்பாலிக்கிறார்கள்.
முதல் தளத்தில் நடுநாயகமாக கிழக்கு நோக்கி வைகுண்ட நாதர் அருள்கிறார். இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.பிராகாரச் சுற்றில் தெற்கு நோக்கி கண்ணன், மேற்கு நோக்கி நாசிம்மர், வடக்கு நோக்கிப் பூவராகர் என இங்கும் 4 பெருமாள்கள் சேவை சாதிக்கிறார்கள். மேல்தளத்தில் அனந்தசயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
பாண்டவ சகோதரர்கள் இழந்த ஆட்சியை மீட்டுத் தந்த தலம்
இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலம் சுந்தர வரத பெருமாள் கோயில். இந்த கோவிலை வழிபட்டபிறகே பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கோயிலுக்குச் சென்று தவநாராயணரையும் தரிசித்து வழிபட்டால், தோஷங்கள் யாவும் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.