சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்

துளசி தீர்த்தத்துடன்,மிளகும் பிரசாதமாக வழங்கப்படும் பெருமாள் கோவில்

கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் அபூர்வ காட்சி

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள சூலூர் தலத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோவில். முற்காலத்தில் சூரபாண்டியநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பின்னர் சூரலூர் என்ற பெயரில் மருவி, தற்பொழுது சூலூர் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது பெருமாள் கோவில்களில் ஓர் அபூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். ஆனால் பெருமாளின் பின்புறம் இருப்பதால், பக்தர்களால் ஆஞ்சநேய மூலவரைக் காண இயலாது.

பொதுவாக எல்லாப் பெருமாள் கோவில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இக்கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். பெருமாளே, மிளகு கேட்ட வரலாற்றாலும், ஓரு பிடி மிளகு கொடுத்ததன் சிறப்பாலும், இன்றும் இக்கோயிலில் மதியம் பெருமாளுக்கு மிளகு நைவேத்தியம்தான் படைக்கப்படுகிறது. அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். மேலும், வருடம் முழூவதும் மிளகு வைத்துக் காரமாகப் பூசை செய்வதால் இனிப்பான அதாவது, சர்க்கரைப் பொங்கல் தவிர வேறு நைவேத்தியம் இங்கு கிடையாது. பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊற வைத்து சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. மிளகே அக்னி வடிவமாக இருப்பதால் இக்கோவிலில் சுவாமிக்குத் தவிர, சுபகாரியங்களுக்கு அக்னி உபயோகிப்பதில்லை.

இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் அனைத்துவித வேண்டுதல்களும் நிறைவேறியதும் மிளகுகளை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

 
Next
Next

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்