பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

விநாயகர் சதுர்த்தி திருவிழா

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விநாயகருக்கு செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்

முக்குறுணி கொழுக்கட்டை படையல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்கோவில் . இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை

படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்

பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.

தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்குறுணி கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள்.

18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைப்பார்கள்.

அன்னக் கூடையில் வைத்து அந்தப் பெரிய உருண்டையை கொதிக்கும் தண்ணீர் உள்ள அண்டாவின் நடுவே தொங்கவிட்டுப் பல மணி நேரம் தொடர்ச்சியாக வேகவைப்பார்கள்.

பின்னர் இந்த வேக வைத்த கொழுக்கட்டையை, உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள். 

முக்குறுணி கொழுக்கட்டை

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்கோவில் .

Previous
Previous

மானூர் பெரியாவுடையார் கோவில்

Next
Next

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்