தேவராயன் பேட்டை (திருச்சேலூர்) மச்சபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தின் போது சிவபெருமானை வழிபட்ட தலம்
மீன் ராசிக்கான பரிகார தலம்
கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த தலம்
கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள பண்டாரவாடை (19 கி.மீ.) என்ற ஊருக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவராயன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது மச்சபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. மகாவிஷ்ணு முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து, இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டதால் இறைவன் மச்சபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இது ஒரு திருஞானசம்பந்தர் பாடிய தேவார வைப்புத் தலமாகும். முருகப்பெருமான் மீது கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த புண்ணிய தலம். தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட கோவில் இது.
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனிடமிருந்து ஹயகிரீவன் என்ற அரக்கன் படைப்புக்குரிய வேதங்களை கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். இதனால் படைப்புத்தொழில் தடைபட மகாவிஷ்ணு மச்சஅவதாரம் எடுத்து கடலுக்கடியி்ல் சென்று அரக்கனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்து படைப்புத் தொழிலை காப்பாற்றினார். அரக்கனைக் கொன்ற தோஷத்திலிருந்து வீடுபட இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு சுய உருவம் அடைந்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து வழிபட்டதால் வைணவர்களும் வழிபடும் சிவஸ்தலமாக விளங்குகிறது. இவ்வாலயம் மீன் ராசி பரிகாரத் தலமாக விளங்குகிறது.
திங்கள்கிழமை, பிரதோஷம், உச்சிக் காலத்தில் மச்சபுரீஸ்வரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும். குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், பார்வைக் குறைபாடு, செவித்திறன் அதிகரித்தல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். மீன ராசிக்காரர்கள், வேதம் ஓதுவோர், ஜோதிடர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வழிபட வேண்டிய கோவில் இது.