முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
இரட்டை பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். முறப்பநாடு, நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. நவகைலாய தலங்களில் இக்கோவில் குரு தலம் ஆகும்.
இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால், காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரு பைரவர் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில், தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
தகவல், படம் உதவி I திரு R. ஆனந்த் குருக்கள், ஆலய அர்ச்சகர்