முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
நவகைலாய தலங்களில் குரு தலம்
இரட்டை பைரவர்கள் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.
இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.
முறப்பநாடு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. இந்த கோவில், நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசநாதர், குரு அம்சமாக இருப்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். எனவே, குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.
வியாழ பகவானின் அனைத்து சக்திகளையும் இத்தலம் பெற்றிருப்பதால், பக்தர்கள் இந்த கோவிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படிச் செய்தால், நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரட்டை பைரவர்கள் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
பொதுவாக சிவாலயங்களில் ஒரு பைரவர் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில், தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு, மீன ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இதுதான்.
இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடைகள் விலகுவதாக ஐதீகம்.
தகவல், படம் உதவி I திரு R. ஆனந்த் குருக்கள், ஆலய அர்ச்சகர்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு.