கொடுவாய் நாகேசுவரர் கோவில்
அஸ்திவாரம் இல்லாமல் மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ள வித்தியாசமான கட்டிட அமைப்பு
அகழி அமைப்பில் அமைந்துள்ள இறைவன், இறைவி சன்னதிகள்
திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்திற்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுவாய் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
நாகேசுவரர், கோவர்த்தனாம்பிகை சன்னதிகள் இரண்டும், அகழி அமைப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அமைப்பு உள்ளது. அஸ்திவாரத்துக்கு கீழ், பல நூறு அடிக்கு வெறும் மணல் மட்டுமே போடப்பட்டுள்ளது. அருகில், ஆறுகள் ஏதும் இல்லாத நிலையில், மணல் போட்டு அதன் மீது கற்கள் அடுக்கி, கோவில் அமைக்கப்பட்டுள்ளதும், கருவறை, மண்டப சுவர்களை சுற்றிலும், அகழி அமைக்கப்பட்டு, கற்களால் வடிகால் போல் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இதைச்சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததாக, செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன. நவக்கிரக கோவில் புதுப்பிக்கும்போது, 250 லாரி மணல் மட்டுமே அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளதை பார்த்து, இப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இப்படி அஸ்திவாரம் இல்லாமல், மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ளதும், கோவில் அகழி அமைப்பில் உள்ளதும், பழங்கால கட்டட கலையின் சிறப்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
இக்கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து உள்ளன. யாழி அமைப்பு, அன்னப் பறவை, சுவாமி சன்னதி மேற்கூரையில், சந்திர, சூரிய கிரகணத்தை விளக்கும் பாம்பு பிடிக்கும் கதை, அம்பாள் சன்னதி முன், சுந்தரர் பாடியதையடுத்து, முதலை வாயிலிருந்து குழந்தை வெளியேறுவது, ஆடல் மகளிர் சிற்பங்கள் என அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. மீன், நடனமாடும் பெண், பாம்பு, குதிரையில் ஒரு சிப்பாய் பன்றியைக் கொல்வது, பாம்புடன் பாம்பு பிடிப்பவன், ஒரு புலி ஒரு பெண்ணைத் தாக்குவது போன்ற சிலைகள் கோவிலின் சுவர்களில் உள்ளன. ஒரே கல்லிலான மிக உயரமான தீபஸ்தம்பம், இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
வாசகர்களின் கவனத்திற்கு
இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.
ஒரே கல்லிலான தீபஸ்தம்பம்