பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில்
பித்ரு தோஷம் நீக்கும் கங்காள நாதர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இந்த கோவிலின் புராண பெயர் 'அயனீச்சுவரம்'. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நவ கைலாய தலங்களில், சூரியனுக்குரிய தலம் இது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் கங்காள நாதர் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும், கலையம்சம் மிக்க மூர்த்தியாக விளங்குகின்றார். கங்காள நாதர், என்பது அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாகும். இக்கோவிலில் கங்காள நாதர் ஏழடி உயரத் திருமேனியுடன், நீண்ட கைகளும் கால்களும் உடையவராய், பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடது கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடமும். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலமும் அணிந்து இருக்கிறார். புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகத்துடன் காட்சி அளிக்கிறார். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும், மறுகையில் முத்திரையும் தாங்கி இருக்கின்றார். அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் காட்சி அளிக்கிறார்கள். இதில் சில அப்சரஸ்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த கங்காளநாதரை அமாவசையன்று காலை தரிசனம் செய்தால் பித்ரு தோஷம் முதல் அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
நம் முன்னோர்களின் கட்டிடக்கலைத்திறனுக்கும், சிற்பத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் (15.12.2024)