
அருணாசலேசுவரர் கோவில்
செந்தூர விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பல விநாயகர் சன்னதிகள அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமாக விளங்குபவர் சம்பந்த விநாயகர்.
இவர் கொடி மரம் அருகே தனிச் சந்நதியில் சுமார் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. பொதுவாக ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எநத கோவிலிலும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.
விநாயகருக்கு செந்தூரம் பூசுவதின் பின்னணிக் கதை
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அம்மளைக் கட்டுப்படுத்தி பலரையும் கொடுமை செய்தான்.
இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். அதை நினைவு படுத்தும் வகையில், சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இத்தல விநாயகருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்

தலத்தின் தனிச்சிறப்பு
நாகராஜன் வழிபட்ட தலங்கள்
நாகராஜன், பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்தபடி பூமியை பல காலம் தாங்கி வந்தார். அவர் பூமியின் பாரம் சுமக்க முடியாமல் சிரமப் பட்டார். அதனால் அவர் சிவபெருமானை வேண்டினார். மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் கீழ்கோட்டமான நாகேஸ்வரன் கோயிலில் முதல் காலத்திலும் திருநாகேஸ்வரத்தில் இரண்டாவது காலத்திலும் திருப்பாம்புரத்தில் மூன்றாவது காலத்திலும் நாகூர் நாக, நாதசுவாமி திருத்தலத்தில் நான்காவது காலத்திலும் தன்னை வழிபட்டால் பழைய வலிமை கிடைக்கும் என சிவபெருமான் அருளினார். அவ்வாறே நாகராஜன் தமது தேவிகளுடன் மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் பூஜை செய்து பழைய வலிமைப் பெற்றார்
ராகு, கேது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்த நான்கு தலங்களையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

திருவாப்புடையார் கோவில்
மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.
அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.
ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்
இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..
இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.

. பரங்கிரிநாதர்.கோவில்
சிவபெருமான் குன்று வடிவில் காட்சி தரும் தேவாரத்தலம்
திருப்பரங்குன்றம் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.சுவாமியின் திருநாமம் பரங்கிரிநாதர். .அம்பிகை ஆவுடைநாயகி.பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
கருவறையில் சிவபெருமான் லிங்க உருவில் அமர்ந்துள்ளார். இக்கருவறையில் லிங்கத்திற்குப் பின்னால் சிவனும், சக்தியும் அமர்ந்துள்ளனர். இது போல் கோவில்களில் லிங்கத்திற்குப் பின்னால், அம்மையும், அப்பனும் அமர்ந்து காட்சி தருவது, மிகச் சொற்பமான கோவில்களில் மட்டுமே. கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் , அதிகை வீரட்டானம், வேதாரண்யம் , காஞ்சீபுரம், திருவீழிமிழலை ஆகியவை அவற்றில் சிலவாகும்..

எமதர்மராஜன் கோவில்
எமதர்மராஜாவிற்கென்று தனிக்கோவில்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா கோவில். இதுவரை, சில கோயில்களில் எமதர்மனுக்கென்று தனிச் சந்நிதிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இக்கோவில், எமனுக்கென்று தனிக்கோவிலாக இருப்பது தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் எமதர்ம ராஜா ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் . இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான் இஷ்ட தெய்வம். சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
எமதர்ம ராஜா கோவில் உருவான வரலாறு
ஒரு சமயம் பார்வதிதேவி பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் சிறு குழந்தையாக அவதரித்தார். சிவபெருமான் பிரகதாம்பாளை எமதர்ம ராஜாவிடம், ஒப்படைத்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறும், அந்தப் பெண் குழந்தை பெரிய பெண் ஆன பின்னர் தனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என கட்டளையிட்டார். திருச்சிற்றம்பலத்தில் வளர்ந்ந பிரகதாம்பாள் திருமண பருவத்தை அடைநததும், தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன்., கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார். பின்னர், மன்மதனின் மனைவி ரதிதேவி மன்மதனை ,உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார். ஆனால் சிவபெருமான், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார்.
எமதர்ம ராஜா பூஜையின் சிறப்புகள்
எமதர்ம ராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானப் பலன்களைத் தரும். ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை எமதர்ம ராஜாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம்.
பணத்தை வாங்கிக் கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கம் உண்டு. இதற்கு 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. எமபயத்தைப் போக்கிக் கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும் , திருமணத் தடை நீங்கவும் இங்கே வழிபடுகிறார்கள்.

தலத்தின் தனிச் சிறப்பு
இரண்டு தேவாரப் பதிகங்கள் பெற்ற தலங்கள்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அவற்றில் மூன்று தலங்களில் மட்டும், தனித்தனியே இரண்டு தேவாரப் பதிகங்கள் அங்கு வெவ்வேறு சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்டுள்ளது. அந்த மூன்று தலங்கள் திருமீயசச்சூர், திருப்புகலூர் மறறும் திருவாரூர் ஆகும்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்திருவாரூர் ஆழித்தேர்
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையைக் கொண்டது.
ஆழித்தேர் என பெயர் ஏற்பட்ட காரணம்
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற சோழ மன்னன் முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு இந்தத் தேர் உருவானது . அதனாலேயே இது ஆழித்தேர், அதாவது கடல் போன்ற தேர் என்று பெயர் பெற்றது்.
ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப் பெருமான்.
திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்ந தேரானது, பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டுள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும்.
இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 150 நைலான் கயிறு கட்டுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.
ஆழித்தேரோட்டம்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் கூறுவார்கள். இந்நிகழ்ச்சி 'தேர்த்தடம் பார்த்தல்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை
மொத்தத்தில் ஆழித்தேர், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுகின்றது.

வீரட்டானேசுவரர் கோவில்
சிவபெருமான் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவதிகை. இத்தலத்து . இறைவன் திருநாமம் வீரட்டானேசுவரர். இறைவி பெரியயநாயகி.. சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை. முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் தான் தரிசனம் தருவார்.சில சிவத்தலங்களில் உள்ள கருவறைகளில் அதுபோன்ற சிவலிங்கத்திற்கு பின்னால் ஈசனின் திருமணக்கோலம் அல்லது ஈசனின் ஏதேனும் ஒரு திருவிளையாடல் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும் .ஆனால் திருவதிகை திருதலத்தில் மட்டும் ஈசனை, நின்ற கோலத்தில் தனிச்சன்னதியயில் தரிசிக்கலாம் .மேருவை வில்லாகவும் வாசுகியை நானாகவும் கொண்டு நின்ற நிலையில் மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அங்கு காட்சி தருகிறார் சிவபெருமானின் இந்த அபூர்வ கோலத்தை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது்.

இராமநாதர் கோவில்
பாதாள பைரவர்
இராமர், இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்இராமேஸ்வரத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு 'பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
திருவேட்டீசுவரர் கோவில்
சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி.
பொதுவாக சிவாலயங்களில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், பள்ளியறைக்கு சிவபெருமானின் பாதங்களை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில், சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறு எந்த தலத்திலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும்.
இத்கோவில் சிவபெருமான், அம்பிகை, முருகன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கொடிமரங்கள் உள்ளன. இது வேறு எந்த தலத்திற்கும் இல்லாத மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
ராகு கேது பரிகாரத் தலம்
இத்கோவில் ராகு கேது பரிகாரத் தலமாகும். எனவே ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகங்களுக்குரியய தானியங்களான உளூந்து, கொள்ளு, மந்தாரை மற்றும் செவ்வரளி மலர் கொண்டு திருவேட்டீசுவரரை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவேட்டீசுவரர் கோவில்
வேடுவனாக வந்த சிவபெருமான்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம் பஜார் மார்கெட் அருகில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாக காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது.
செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை மணந்த சிவபெருமான் திருவேடீஸ்சுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீசுவரன் என பெயர் பெற்றார் .
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வேட்டகம் (மாமியார் வீடு) ஆன தலம்
இலக்குமி தாயார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயாரை கைபிடித்ததால், பார்த்தசாரதிக்கு இத்தலம் வேட்டகம் (மாமியார் வீடு) ஆனது, அதனால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.
மொகலாயர், ஆங்கிலேயர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோவில்
இக்கோவிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோவில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அமீர் மஹாலிலிருந்து வரும் அர்த்தசாம பூஜைப் பொருட்கள்
ஆற்காடு நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு, ஆற்காடு நவாப் பரம்பரையினர் மூலமாக, அவரகள் தற்போது வசித்து வரும் அமீர் மஹாலிலிருந்து, பால், புஷ்பம் இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இராமநாதர் கோவில்
அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்
இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதிகம்.
இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.
இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மங்களேசுவரர் கோவில்
உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
கடலில் கிடைத்த மரகதப் பாறை
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற இடத்தில் மரைக்காயர் என்ற ஏழை மீனவர் வசித்து வந்தார். இவர் தினமும் உத்திரகோசமங்கை இறைவன் மங்களேசுவரர்ரை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று அடித்ததால் அவருடைய படகு நிலைகுலைந்து வெகுதூரம் போய் ஒரு பாசி படிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது அந்தப் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்துவிட்டது.
அதுவரை அடித்துக்கொண்டிருந்த புயலும் மழையும் சட்டென்று நின்று விட ஒரு வழியாக அந்த பாறையோடு சேர்த்து படகை செலுத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் கொண்டு வந்த பாசி படிந்த அந்தப் பாறைக்கல்லை என்னவென்று தெரியாமல் வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்திருந்தார். மரைக்காயர் வீட்டுக்குள் போக வர அந்தக் கல் மீது நடந்து நடந்து அதன் மேலே ஒட்டியிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் அந்த கல் பச்சை நிறத்துடன் பள பளவென்று மின்னியது.
மரைக்காயர் அந்த பச்சை பாறையை அரசரிடம் தந்தால் தமது வறுமை நீங்கும் என்று எண்ணி பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு கடலில் நடந்த அனைத்தையும் விவரித்து தனது வீட்டில் உள்ள பச்சைக்கல் விபரத்தை சொன்னார். அரண்மனை ஆட்கள் அந்த பச்சை பாறையை எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள்
ரத்தின கற்களைப் பற்றிய விபரம் அறிந்த ஒருவர் அதை சோதித்துப் பார்த்தார். பச்சை பாறையை சோதித்த அவர் ஆச்சரியத்துடன், இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மன்னரிடம் சொன்னார் மன்னர் பச்சை பாறைக்கு உரிய பொற்காசுகளை மரைக்காயருக்கு அளித்து வழியனுப்பி வைத்தார்.
சித்தர் வடித்த மரகத நடராஜர் சிலை
அந்த அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலையை செதுக்க வேண்டும் என்று அரசன் விரும்பினார். ஆனால் அந்த சிலை வடிப்பதற்கு தகுதியான சிற்பி மன்னருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை அரசன் முதலாம் கயவாகு அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதி யைப் பற்றிய விவரம் கிடைத்தது. சிற்பி ரத்தினசபாபதி பாண்டிய மன்னன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை கண்டதும் மயங்கி விழுந்தவர், என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது என்று கூறி சென்றுவிட்டார்.
மன்னர் வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னிதி முன் நின்று பிரார்த்தனை செய்தார் அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிய மன்னரும் பிரஜைகளும் ஒரு சித்தரை கண்டனர் அந்த சித்தரின் பெயர் சண்முகவடிவேலர்.
மன்னரின் கவலை நீங்கியது மரகத நடராஜரை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முகவடிவேலரிடம் ஒப்படைத்தார். சித்தர் சண்முகவடிவேலர் அந்த பெரிய மரகதப்பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக செதுக்கினார் அந்த சிலைதான் உத்தரகோசமங்கையில் இப்போதும் காட்சியளிக்கும் மரகத நடராஜர். இந்த நடராஜர் சிலையின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் கூட, பால் அபிஷேகத்தின் போது நமக்கு தெரியும் அளவுக்கு மிக நுணுக்கமாகவும், அழகுடனும் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் நமக்கு காட்சியளிப்பார். மார்கழி திருவாதிரையின்போது பழைய சந்தன காப்பு களையப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் மீண்டும் புதிய நடன கோலத்துடன்சந்தனக்காப்பு இடப்படும். புன்னகை தவழும் கம்பீரமான முகத்துடன் திருநடன கோலத்துடன் காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை மரகத நடராஜரை, அவசியம் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.

திருநோக்கிய அழகியநாதர் கோவில்
சிவபெருமானுக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
மதுரை ராமேஸ்வரம் சாலையில் சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாச்சேத்தி. இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர். இறைவி மருநோக்கும் பூங்குழலியம்மை.
திங்கட்கிழமைகளில் ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வார்கள். பார்வதி தேவி, தனது குறைகளை போக்க வேண்டி இத்தலத்தில், திங்கட்கிழமையில் துளசி தளங்களால் சிவபெருமானை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.
மகாலட்சுமி வழிபட்ட தலம்
திருமணமானபின், கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன் மனைவியர், அழகிய நாதரை வழிபட்டால், பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம். ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும். பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள இரண்டு மரகதலிங்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இரண்டு மரகதலிங்கங்களை ஒருசேர தரிசிப்பது மிகவும் அபூர்வம். எட்டு வகையான சனிதோஷங்களும் இவரை வழிபட்டால் விலகும் பிரதோஷ நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைஅள் உண்டு அப்போது மட்டும் மரகத லிங்கம் தரிசனம் கிட்டும்.

அகதீஸ்வரர் கோவில்
சரும நோய்கள் தீர்க்கும் தலம்
தி ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னிரை கிராமத்தில் அமைந்துள்ளது அகதீஸ்வரர் கோவில். இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதனால் இறைவனுக்கு அகதீஸ்வரர் என்று பெயர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. இத்தல இறைவனுக்கு நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

வில்வவனேசுவரர் கோவில்
பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர்
இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரபாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் துவாரபாலகர்களாக நிற்பது வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.
வீணையுடன் தட்சணாமூர்த்தி
பெருமாள், பிரம்மாவிற்கு அருகில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 4 அடி உயர தட்சணாமூர்த்தி நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார். இப்படி வீணை ஏந்திய தட்சணாமூர்த்தியை வேறு எங்கும் காண முடியாது
துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இதுவும் ஒரு அபூர்வ அமைப்பாகும். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொது ஆவுடையார் கோவில்
திங்கட்கிழமை இரவு மட்டுமே திறந்திருக்கும் சிவன் கோவில்
முடி வளர்வதற்காக பெண்கள் அளிக்கும் விளக்குமாறு காணிக்கை
பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது.
சிவபெருமான், வான் கோபர், மகாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கு இடையே, இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என ஏற்பட்ட சந்தேகத்தை இங்குள்ள ஆலமரத்தில் குருவடிவில் உட்கார்ந்து தீர்த்து வைத்தாராம் . இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து, நடுநிலையாக இருந்து சிவனார் அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு பொது ஆவுடையார் எனும் திருநாமம் அமைந்தது.
இந்த சம்பவம் திங்கட்கிழமையில் நடைபெற்றதால் பல வருடங்களாக திங்கட்கிழமை இரவு மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது. இங்கு மூலஸ்தானத்தில் உள்ள ஆலமரமே சிவனாக காட்சி அளிக்கிறார். வெள்ளால மரமே இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை இரவு மட்டுமே திறக்கப்படும் இந்த கோவில் இரவு நடுநிசி 12 மணி பூஜைக்கு பின்னர் நடை சாற்றப்படும். மீண்டும் மறுவாரம் தான் திறக்கப்படும். பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு சிவபெருமானே பிரதானம் என்பதால் அம்பாள் சன்னதி கிடையாது.
பெண்கள் அளிக்கும் வினோதமான விளக்குமாறு காணிக்கை
பெண்கள் தங்களுக்கு முடி வளர வேண்டும் என்பதற்காக இக்கோயிலுக்கு விளக்குமாற்றை காணிக்கையாக வேண்டிக்கொள்கிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை கொண்டு தாங்களே விளக்குமாற்றை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்கள். இப்படிச் செய்வதால் தென்னங்கீற்று போல தங்கள் முடியும் வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட விளக்குமாறுகள் ஆயிரக்கணக்கில் குவிந்து விடுகின்றன என்கிறார்கள்.
கார்த்திகை மாதம் சோமவாரத்துக்கு இங்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடம் ஒரு முறை தை பொங்கலன்று மட்டும்தான் இக்கோவில் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு இந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை. இவரை வேண்டிக் கொண்டு, எந்த வியாபாரத்தை துவங்கினாலும் லாபம் அமோகமாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள் .

சித்திரகுப்தன் கோவில்
நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்
அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்
ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக் கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார்.அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.
சித்திரகுப்தனின் கதை
எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.
பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,
பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன்.சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள்.பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.
சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான்.அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத,எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.
சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.
எனவே சித்திரகுப்தனை வணங்கினால்,கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

கவிகங்காதீஸ்வரர் கோவில்
அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்
பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.
5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.
மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

யோகநந்தீஸ்வரர் கோவில்
பெண் சாபம் போக்கும் தலம்
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர் என்பதாகும். இறைவி சவுந்திரநாயகி. பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம், பாவம் நீங்கும்.
நான்கு யுக பைரவர்கள்
இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.