யந்திர சனீஸ்வரர் கோவில்

யந்திர சனீஸ்வரர் கோவில்

லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்

நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு

மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.

சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.

நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு

சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்

சனி தோஷ நிவர்த்தி தலம்

கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.

புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.

வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி

பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.

சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.

பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லாலோ அல்லது வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.

Read More
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்

சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.

இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.

இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Read More
சுத்தரத்தினேசுவரர் கோவில்

சுத்தரத்தினேசுவரர் கோவில்

சிறுநீரக நோய்களைத் தீர்ககும் பஞசநதன நடராஜர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாடலூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள தலம் ஊட்டத்தூர். இறைவன் திருநாமம் சுத்தரத்தினேசுவரர். இறைவி அகிலாண்டேசுவரி.

இக்கோவிலில் தனிச் சன்னதியில் பஞசநதன நடராஜர் அருள் பாலிக்கிறார்.எட்டு அடி உயரத் திருமேனி உடைய இவர் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நடராஜர் என்ற பெருமை உடையவர். இவர் சூரிய பிரகாசிப்புத் தருகின்ற, அரிய வகைக் கல்லான பஞசநதன என்ற கல்லால் ஆனவர். இத்தகைய கல்லாலான சிற்பங்களை கோவில்களில் காணபது என்பது மிக மிக ஆபூர்வம்.

சிறுநீரகத்தில் கல் உருவாகி அவதிப்படுபவர்கள், சிறுநீரகம் செயலிழந்து அதனனால் ரத்தம் சுத்தகரிப்பு செய்ய வேண்டியவர்கள் என சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இத்தலத்துக்கு ஒரு கிலோ வெட்டிவேரை வாங்கி வந்து அதனை 48 துண்டுகளாக்கி பின் அதனை மாலையாகத் தொடுத்து பஞசநதன நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அந்த மாலையையும், இத்தலத்து தீர்த்தமான பிரம்ம தீர்த்தத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வெட்டிவேரை தினம் ஒரு துண்டு வீதம் பிரம்ம தீர்த்தத்தில் ஊற வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்பு குறைகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் சிறுநீரக நோய் குணமடைந்து செல்கின்றனர்.

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

நாரதருக்கு நாதோபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி.

சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.

சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை

ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.

இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தட்சிணாமூர்த்தி

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.

Read More
வெளிகண்டநாத சுவாமி கோவில்

வெளிகண்டநாத சுவாமி கோவில்

சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்

திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

பொதுவாக சனி பகவான் காக வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் கருட வாகனத்துடன் அவர் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

சனி பகவானுக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனி பகவான் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக'

சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக' ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.

சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார்

சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம் தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் ஆகும்.

சூரிய பகவான் பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்ற தலம்

ஒரு சமயம் சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிரதோஷ நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால், அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான்.

சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரியகோடீஸ்வரரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் காணிக்கையாகச் அர்ப்பணித்தார். அப்படி அவர் சமர்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்து, பின்னர் அந்த இடமே இலுப்பை மரக் காடாகியது. மாமுனிவர் இலுப்பை மர விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து மாலை வேளைகளில் கோடி தீபங்கள் ஏற்றி சூரியகோடீசுவரரை வழிபட ஆரம்பித்தார்.

பிரதோஷ காலத்தில் ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக் கொண்டடிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியபகவான் அந்த கோடி தீபங்களைக் கண்டு வணங்கி பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்றார்.

கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.

Read More
செந்நெறியப்பர் கோவில்

செந்நெறியப்பர் கோவில்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை ருண விமோசனர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ள தேவாரத் தலம் திருச்சேறை. இறைவன் திருநாமம் செந்நெறியப்பர்.

இங்கு தனி சன்னதியில் 'ருண விமோசனராய்' அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய, அனைத்து வித கடன் தொல்லைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இச் சன்னதியின் முன் நின்று"கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே" எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள 'ருணவிமோசன லிங்கேஸ்வரர்'. ருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால், வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

Read More
சூரியகோடீசுவரர் கோவில்

சூரியகோடீசுவரர் கோவில்

பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்

கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.

இக்கோவிலில், சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

Read More
ஜலநாதீசுவரர் கோவில்

ஜலநாதீசுவரர் கோவில்

அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.

கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி

இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

Read More
நவபாஷாண நவக்கிரக கோவில்

நவபாஷாண நவக்கிரக கோவில்

ராமபிரான் கடலின் நடுவே நவக்கிரக பூஜை செய்த தலம்

ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசை நோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்பு படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது.

பின்பு 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்த ராமபிரான் தமது கையால் கடலின் நடுவே ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்து நவக்கிரக பூஜை செய்தார். புராண காலம் தொட்டு இத்தலத்தில் ஆரவாரமில்லாத கடலின் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

இத்தலத்திலே பார்வதியும், பரமேஸ்வரனும் சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளி, இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கினார்கள். மேலும் ராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.

பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க அருளும் தலம்

முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை இத்தலத்தில் செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆடி அமாவாசை திருவிழா

இத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை பத்து நாள் திருவிழாவின்போது, நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட கூடுவது வெகு சிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

Read More
சேஷபுரீஸ்வரர் கோவில்

சேஷபுரீஸ்வரர் கோவில்

ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.

ஆதிசேஷன் வழிபட்ட தலம்

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

விஷம் தீண்டாப் பதி

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

ராகு கேது பரிகார தலம்

திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.

போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
தட்சிணாமூர்த்தி  கோவில்

தட்சிணாமூர்த்தி கோவில்

வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில் தனிக்கோவில் கொண்டு தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.

எல்லா கோயிலிலும் சுற்றுப்பகுதியில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி இந்த கோயிலில் மூலவராக அதுவும் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது, வேறெங்கும் காண முடியாத அமைபபு. இதனால், இத்தலம் 'வட குருதலம்' என அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூலவர் தட்சிணாமூர்த்தி வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது

வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

Read More
திருவெண்காடர் சிவன் கோவில்

திருவெண்காடர் சிவன் கோவில்

சிவலிங்கத் திருமேனி வடிவில் சிறியதாகவும், பெரியதாகவும் மாறித் தோன்றும் அதிசயம்

திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 38 கி. மீ தூரத்தில் திருநெல்வேலி - பொட்டல்புதூர் சாலையில் பாப்பான்குளம் எனும் ஊரில் திருவெண்காடர் சிவன் கோவில்

அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் திருவெண்காடர். இறைவி வாடாகலை நாயகி.

வடக்கே வெண்பனி உறைந்த கயிலை மலையில் உறையும் ஈசனே இங்கு வந்து எழுந்தருளி இருப்பதால் இவருக்கு திருவெண்காடர் என்று பெயர்.

இந்தக் கோவிலின் சிவலிங்கத் திருமேனியானது சந்திரகாந்தக் கல் என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும். கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிவலிங்கமானது சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரிவது ஒரு அதிசயமாகும். மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

Read More
கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில்

குருதோஷம் போக்கும் பரிகாரத் தலம்

காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் பள்ளுர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது.

இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனைத் துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் 'கோவிந்தபாடி' என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது 'கோவிந்தவாடி அகரம்' என அழைக்கப்படுகிறது.

இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியுள்ளார். ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள் எவரையும் பார்க்காதது போலவும், இருக்கும் எல்லாரையும் பார்ப்பது போலவும் இரு கோணங்களில் காணப்படுகிறது. வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி இவர். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல் 'கயிலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது. சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சி தருகிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் எழுந்தருளியிருக்கிறார்.

தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுவாகும். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். குருதோஷம் போக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்க்கின்றது.பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.

Read More
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்

திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் ஸ்ரீவாஞ்சியம். இறைவன் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவி மங்களநாயகி.

ஒரு சமயம் எமதர்மராஜா, எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே எமதர்மன் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜனை தரிசித்த பின்னரே தன்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை எமதர்மனுக்கு வழங்கினார். அதன்படியே இங்கு எமதர்மனுக்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.

இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு கரஙகளுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தான்தோன்றீஸ்வரர் கோவில்

தான்தோன்றீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தம் மனைவியருடனும், வாகனத்துடனும் இருக்கும் ஆபூர்வக் காட்சி

திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர் தலத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் வக்கரித்த நிலையில் காட்சி தருவார்கள். மேலும் சில தலங்களில் தம்பதி சமேதராகவோ அல்லது தம் வாகனத்துடனோ காட்சி தருவார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் தம் வாகனத்துடன் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இக்கோவிலில் குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் காப்புத் திருவிழா வெகு பிரசித்தம்.

Read More
ராமநாதீஸ்வரர் கோவில்

ராமநாதீஸ்வரர் கோவில்

சிவனே குருவாக இருந்து ராமருக்கு வழிகாட்டிய தலம்

ராமநாதீஸ்வரர் கோவில் , சென்னை போரூர் சந்திப்புக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இக்கோவில் மிகவும் பழமையானது.

ராமர் சீதையை தேடி வனத்தில் அலைந்து திரிந்து செல்லும் வேளையில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமரின் காலை இடர, ராமர் உள்ளுணர்வால் வேரின் உள்ளே சிவலிங்கம் இருக்கிறது என்பதை உணர்கிறார்.சிவனின் தலைமீது கால்பட்டதால்,உண்டான தோஷத்தை போக்க ,அங்கேயே தவத்தில் இருந்தார்,நாள் ஒன்றிற்கு ஒரு நெல்லிக்கனியை மட்டுமே உணவாக உண்டு 48 நாட்கள் தவம் மேற்கொண்டார்.முடிவில் வேரின் அடியில் இருந்த லிங்கம் பூமியை பிளந்துகொண்டு வந்து வெளிப்பட,சிவபெருமான் ராமருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார். பரவசத்தில் ராமர் சிவபெருமானை கட்டியணைக்க உடனே சிவலிங்கம் ஆறு அடி உயர அமிர்தலிங்கமாக மாறுகிறது. ராமர் சீதையை தேட வழிகேட்க, 'ராமேஸ்வரம் நோக்கி செல்' என்ற அசரீரி கேட்கிறது.

சிவபெருமான் ராமருக்கு காட்சி அளித்தமையால், இங்குள்ள மூலவர் ஸ்ரீராமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மிகப்பெரிய லிங்கவடிவில் 6 அடி அமைப்பும் மிக அழகிய அலங்காரத்துடனும் கிழக்கு நோக்கி அருள்பலிக்கிறார். இந்த பிரும்மாண்ட லிங்கம் சுயம்புவாக தோன்றியவர். அம்பிகை சிவகாமசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறார். சிவனே வந்து வழிகாட்டிய காரணத்தால் அவரே குருவாகிறார் . ஆகவே தனியாக குருச்சன்னதி கிடையாது . குருவருள் பெறவும் ,வியாழன் கோள் சம்பந்தமான எந்தவித தோஷத்தையும் போக்கும் தலமாக விளங்குகிறது.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ராமேஸ்வரத்தில் செய்யும் பரிகாரங்களை செய்கிறார்கள். ராமேஸ்வரத்தில் செய்யும் பலன், இத்தலத்திலேயே கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த கோவில் உத்திரராமேஸ்வரம் என்றும் கூறப்படுகிறது.

தீர்த்தம் தந்து, சடாரி வைக்கும் சிவன் கோவில்

பொதுவாக பெருமாள் கோவிலில் மட்டுமே பிரசாதமாக கிடைக்கும் தீர்த்தம் , சடாரி போன்றவை சிவன் கோவிலான இங்கும் கிடைக்கும். தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கும் சிவன் கோவில் என்பதால் இத்தலம் தனிச் சிறப்பைப் பெறுகிறது. இங்கு சுவாமிக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் விசேக்ஷம். இங்கு பிரசாதமாகத் தரப்படும் நெல்லிக்கனியை உண்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார். பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, சிவபெருமானையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு சிவபெருமானுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம்.

ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.தடைகள் அகலும். தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும்,நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து அமாவாசை நாட்களில்,இறைவன் புஷ் வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

Read More