வைத்தியநாதசுவாமி கோவில்
குழிகளை நவகிரகங்களாக பாவித்து வழிபடும் தேவாரத் தவம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாகவும்
இந்த தலத்திற்கு செல்லலாம்.இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.
பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.
இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர்.
சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
வைத்தியநாத சுவாமி கோவில்
திருமலை நாயக்க மன்னரின் வயிற்று வலியை குணப்படுத்திய வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது வைத்தியநாதசுவாமி திருக்கோவில்.
வைத்தியநாதசுவாமி நடத்திய திருவிளையாடல்கள்
இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது போன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் வைத்தியநாதசுவாமி அரங்கேற்றியிருக்கிறார்.
திருமலை நாயக்கரின் வயிற்று வலியை தீர்த்த வைத்தியநாதர்
ஒரு சமயம், மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு 'குன்ம நோயினால்' பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக திருமலை நாயக்கர், மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய தான் வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் . இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் 'பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
திருமலை நாயக்கர் அமைத்த முரசு மண்டபங்கள்
திருமலை நாயக்கர், மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறிய பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டிய பின் தான், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்வார். அதற்குப் பிறகுதான் உணவருந்துவார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல் மண்டபங்கள் உள்ளதை காணலாம்.
சரணாகரட்சகர் கோவில்
கண் நோய் தீர்க்கும் தலம்
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
விக்ரம சோழனின் ஆட்சிக் காலத்தில், அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார் என்பவர் திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், அந்த மந்திரி தில்லையாடி திருக்கோவிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான்.
ஆனால் மந்திரி செய்து தர மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது «பரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, இறைவனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான். இதனால் இந்தக் தலத்தின் இறைவன். சரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த நாதர்) என்ற திருப்பெயர் பெற்றார் இத்தல இறைவனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை லரம் அருளும் பெரியநாயகி அம்மன்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரத்தன்று சந்தான பரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்.
எமனேஸ்வரமுடையார் கோவில்
ஆயுளை விருத்தியாக்கும் எமனேஸ்வரமுடையார்
பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் எமனேஸ்வரம். ராமநாதபுரத்தில் இருந்து இத்தல, 37 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமனேஸ்வரமுடையார். இறைவி சொர்ணகுஜாம்பிகை.
எமதர்மனை மன்னித்து அருளிய தலம்
சிவபக்தனான மார்க்கண்டேயருக்கு அவரது பதினாறாவது வயதில் ஆயுள் முடிந்து விடும் என்பது தலைவிதியாக இருந்தது. இறுதி காலத்தில் அவரது உயிரை பறிக்க எமதர்மர் பூலோகத்திற்கு வந்தார். இதனையறிந்த மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். மார்க்கண்டேயர் திருக்கடையூர் வந்த போது அவரது ஆயுள் முடிவடையயும் தருவாயில் இருந்தது. அதனால் அவர் மீது எமதர்மர் பாசக்கயிறை வீசினார். இதனால் பயந்த மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக் கொண்டார். இதனால் பாசக்கயிறு தவறுதலாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான், தனது பணியை சரியாக செய்யாத எமதர்மரை காலால் எட்டி உதைத்தார். இதில் எமதர்மர் பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் வந்து விழுந்தார்.
தனது தவறை உணர்ந்த எமதர்மர், தான் விழுந்த பகுதியில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்னர் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவரது வேண்டுதலுக்கு இணங்க அப்பகுதியில் எழுந்தருளினார்.
திருக்கடையூரில் சம்ஹார மூர்த்தியாக இருந்த சிவபெருமான் இத்தலத்தில் அனுக்கிரஹ மூர்த்தியாக திகழ்கிறார். அதனால் ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம் நீங்கவும் பக்தர்கள், இத்தலத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நாகநாதர் கோவில்
ராகு கிரக தோஷ பரிகார தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருப்பெயர நாகநாதர். இறைவி கிரிஜா குஜாம்பிகை. ஜாதகத்தில் ராகு கிரக தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
ராகு பகவான் சிவன் அருள் பெற்ற தலம்
பாம்பாக இருந்த ராகு பகவான் முனிவர் ஒருவரின் மகனை தீண்டியதால், அந்த முனிவரின் சாபம் பெற்று தன் சக்திகள் அனைத்தையும் இழந்தார். அதளால் ராகு பகவான், இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானின் அருள் பெற்று மீண்டும் தன் சக்தியை பெற்றார் . நாகத்தின் வடிவில் இருந்த ராகு பகவானிற்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவ பெருமான் 'நாகநாதர்' என அழைக்கப்படுகிறார்.
அபிஷேகத்தின போது பால் நீல நிறமாக மாறும் அதிசியம்
இக்கோவிலிள் இரண்டாவது பிரகாரத்தில் ராகு பகவான் தன் இரு மளைவியர்களான நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு பகவான் பிற கோவில்களில் மனித தலையும், நாக பாம்பின் உடலும் கொண்ட தோற்றத்தில்தான் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் ராகு பகவான் முழு மனிதனின் வடிவில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இக்கோவிலில் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
வைத்தியநாத சுவாமி கோவில்
பிரசவப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலம் மடவார் விளாகம் ஆகும். இறைவன் திருப்பெயர வைத்தியநாத சுவாமி. இறைவி சிவகாமி.
ஸ்ரீவில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது.
மடவார் வளாகம் என பெயர் பெற்றதின் கதை
ஆடல் பாடல்களில் வல்லவரான இரு பெண்கள் இத்தல இறைவன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித் தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம்- இடம்).
தாயாய் வந்து பிரசவம் பார்த்த வைத்தியநாதர்
முனனொரு காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் ஒருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் அவள், தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்த பிறகும் கூட தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு புறப்பட்டுச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப் பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார்.
அத்துடன், 'பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் 'காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்' என்று அருளினார்.
வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்ப சம்பந்தமான நோய்களுக்கு, பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள்.
தியாகராஜர் கோவில்
ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூர் தலத்தில் நவக்கிரகங்கள் தியாகராஜப் பெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆதலால் திருவாருரிலுள்ள நவக்கிரகங்கள் அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும்.
ஒரு சமயம் சதயகுப்தன் என்ற அசுரனுக்கு சனி தோஷம் பீடிக்கவே, அவன நவக்கிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். அதனால் பயந்து போன நவக்கிரகங்கள், தியாகராஜப் பெருமானிடம் சரண் அடைந்தன. அவர்களக் காப்பாற்றிய தியாகராஜப் பெருமான், 'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்தவித உபத்திரமும் செய்யக் கூடாது' என்று உத்தரவிட்டார்.
அதனால்தான் இத்தலத்தில், நவக்கிரகங்கள தங்கள் வக்கிரத்தைக் குறைத்துக் கொண்டு, ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நின்று, தியாகராஜப் பெருமானை நோக்கியபடி இருக்கின்றன. நவக்கிரகங்களின் இத்தகைய கோலம், ஒரு காண்பதற்கு அரிய காட்சியாகும்.
சரணாகரட்சகர் கோவில்
சனி பகவான் சன்னதியின் விசேட அமைப்பு
நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில்.
இத்தலத்தில் சனி பகவான் சன்னதி, இறைவன சரணாகரட்சகர் சன்னதிக்கும் இறைவி பெரியநாயகி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது ஒரு விசேடமான அமைப் பாகும். இது போன்ற சனி பகவான் சன்னதி அமைப்பு திருநள்ளாறு தலத்தில்தான் இருக்கின்றது.
சனி பகவான் பூஜை செய்த தலம்
சனி பகவான் மக்களின கர்ம வினைகளை, ஒரு நீதிபதி போல் சீர் தூக்கிப் பார்த்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர். ஆனால் கடமையை சரியாகச் செய்யும் அவருக்கு அவப்பெயர்தான் மிஞ்சுகின்றது. தனக்கு ஏற்படும் அபவாதத்தை நீக்கிக் கொள்ளவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான் இத்தலத்துக்கு வந்து இறைவன் சரணாகரட்சகரை வழிபட்டார். சனி பகவான் பூஜையினால் மனம் மகிழ்ந்த இறைவன, சனி பகவானை வழிபட்டவர்களுக்கு அவர் நற்பலன்களைக் கொடுக்கும் சக்தியைக் அளித்தார்.
இத்தலத்து சனி பகவானுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்து வழிபடுவது தற்பலன்களைத் தரும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இவரை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நீங்கும்.
அருணாசலேசுவரர் கோவில்
செந்தூர விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பல விநாயகர் சன்னதிகள அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமாக விளங்குபவர் சம்பந்த விநாயகர்.
இவர் கொடி மரம் அருகே தனிச் சந்நதியில் சுமார் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. பொதுவாக ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எநத கோவிலிலும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.
விநாயகருக்கு செந்தூரம் பூசுவதின் பின்னணிக் கதை
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அம்மளைக் கட்டுப்படுத்தி பலரையும் கொடுமை செய்தான்.
இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். அதை நினைவு படுத்தும் வகையில், சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இத்தல விநாயகருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்
தலத்தின் தனிச்சிறப்பு
நாகராஜன் வழிபட்ட தலங்கள்
நாகராஜன், பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்தபடி பூமியை பல காலம் தாங்கி வந்தார். அவர் பூமியின் பாரம் சுமக்க முடியாமல் சிரமப் பட்டார். அதனால் அவர் சிவபெருமானை வேண்டினார். மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் கீழ்கோட்டமான நாகேஸ்வரன் கோயிலில் முதல் காலத்திலும் திருநாகேஸ்வரத்தில் இரண்டாவது காலத்திலும் திருப்பாம்புரத்தில் மூன்றாவது காலத்திலும் நாகூர் நாக, நாதசுவாமி திருத்தலத்தில் நான்காவது காலத்திலும் தன்னை வழிபட்டால் பழைய வலிமை கிடைக்கும் என சிவபெருமான் அருளினார். அவ்வாறே நாகராஜன் தமது தேவிகளுடன் மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் பூஜை செய்து பழைய வலிமைப் பெற்றார்
ராகு, கேது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்த நான்கு தலங்களையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
திருவாப்புடையார் கோவில்
மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.
அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.
ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்
இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..
இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.
. பரங்கிரிநாதர்.கோவில்
சிவபெருமான் குன்று வடிவில் காட்சி தரும் தேவாரத்தலம்
திருப்பரங்குன்றம் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.சுவாமியின் திருநாமம் பரங்கிரிநாதர். .அம்பிகை ஆவுடைநாயகி.பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
கருவறையில் சிவபெருமான் லிங்க உருவில் அமர்ந்துள்ளார். இக்கருவறையில் லிங்கத்திற்குப் பின்னால் சிவனும், சக்தியும் அமர்ந்துள்ளனர். இது போல் கோவில்களில் லிங்கத்திற்குப் பின்னால், அம்மையும், அப்பனும் அமர்ந்து காட்சி தருவது, மிகச் சொற்பமான கோவில்களில் மட்டுமே. கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் , அதிகை வீரட்டானம், வேதாரண்யம் , காஞ்சீபுரம், திருவீழிமிழலை ஆகியவை அவற்றில் சிலவாகும்..
எமதர்மராஜன் கோவில்
எமதர்மராஜாவிற்கென்று தனிக்கோவில்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா கோவில். இதுவரை, சில கோயில்களில் எமதர்மனுக்கென்று தனிச் சந்நிதிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இக்கோவில், எமனுக்கென்று தனிக்கோவிலாக இருப்பது தனிச்சிறப்பாகும்.
இக்கோவிலில் எமதர்ம ராஜா ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் . இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான் இஷ்ட தெய்வம். சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
எமதர்ம ராஜா கோவில் உருவான வரலாறு
ஒரு சமயம் பார்வதிதேவி பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் சிறு குழந்தையாக அவதரித்தார். சிவபெருமான் பிரகதாம்பாளை எமதர்ம ராஜாவிடம், ஒப்படைத்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறும், அந்தப் பெண் குழந்தை பெரிய பெண் ஆன பின்னர் தனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என கட்டளையிட்டார். திருச்சிற்றம்பலத்தில் வளர்ந்ந பிரகதாம்பாள் திருமண பருவத்தை அடைநததும், தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன்., கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார். பின்னர், மன்மதனின் மனைவி ரதிதேவி மன்மதனை ,உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார். ஆனால் சிவபெருமான், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார்.
எமதர்ம ராஜா பூஜையின் சிறப்புகள்
எமதர்ம ராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானப் பலன்களைத் தரும். ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை எமதர்ம ராஜாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம்.
பணத்தை வாங்கிக் கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கம் உண்டு. இதற்கு 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. எமபயத்தைப் போக்கிக் கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும் , திருமணத் தடை நீங்கவும் இங்கே வழிபடுகிறார்கள்.
தலத்தின் தனிச் சிறப்பு
இரண்டு தேவாரப் பதிகங்கள் பெற்ற தலங்கள்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அவற்றில் மூன்று தலங்களில் மட்டும், தனித்தனியே இரண்டு தேவாரப் பதிகங்கள் அங்கு வெவ்வேறு சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்டுள்ளது. அந்த மூன்று தலங்கள் திருமீயசச்சூர், திருப்புகலூர் மறறும் திருவாரூர் ஆகும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேர்திருவாரூர் ஆழித்தேர்
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையைக் கொண்டது.
ஆழித்தேர் என பெயர் ஏற்பட்ட காரணம்
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற சோழ மன்னன் முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு இந்தத் தேர் உருவானது . அதனாலேயே இது ஆழித்தேர், அதாவது கடல் போன்ற தேர் என்று பெயர் பெற்றது்.
ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப் பெருமான்.
திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்ந தேரானது, பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டுள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும்.
இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 150 நைலான் கயிறு கட்டுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.
ஆழித்தேரோட்டம்
உலகப் பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் கூறுவார்கள். இந்நிகழ்ச்சி 'தேர்த்தடம் பார்த்தல்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை
மொத்தத்தில் ஆழித்தேர், தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுகின்றது.
வீரட்டானேசுவரர் கோவில்
சிவபெருமான் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவதிகை. இத்தலத்து . இறைவன் திருநாமம் வீரட்டானேசுவரர். இறைவி பெரியயநாயகி.. சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை. முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் தான் தரிசனம் தருவார்.சில சிவத்தலங்களில் உள்ள கருவறைகளில் அதுபோன்ற சிவலிங்கத்திற்கு பின்னால் ஈசனின் திருமணக்கோலம் அல்லது ஈசனின் ஏதேனும் ஒரு திருவிளையாடல் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும் .ஆனால் திருவதிகை திருதலத்தில் மட்டும் ஈசனை, நின்ற கோலத்தில் தனிச்சன்னதியயில் தரிசிக்கலாம் .மேருவை வில்லாகவும் வாசுகியை நானாகவும் கொண்டு நின்ற நிலையில் மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அங்கு காட்சி தருகிறார் சிவபெருமானின் இந்த அபூர்வ கோலத்தை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது்.
இராமநாதர் கோவில்
பாதாள பைரவர்
இராமர், இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர்இராமேஸ்வரத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு 'பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
திருவேட்டீசுவரர் கோவில்
சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி.
பொதுவாக சிவாலயங்களில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், பள்ளியறைக்கு சிவபெருமானின் பாதங்களை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில், சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறு எந்த தலத்திலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும்.
இத்கோவில் சிவபெருமான், அம்பிகை, முருகன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கொடிமரங்கள் உள்ளன. இது வேறு எந்த தலத்திற்கும் இல்லாத மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
ராகு கேது பரிகாரத் தலம்
இத்கோவில் ராகு கேது பரிகாரத் தலமாகும். எனவே ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகங்களுக்குரியய தானியங்களான உளூந்து, கொள்ளு, மந்தாரை மற்றும் செவ்வரளி மலர் கொண்டு திருவேட்டீசுவரரை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவேட்டீசுவரர் கோவில்
வேடுவனாக வந்த சிவபெருமான்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம் பஜார் மார்கெட் அருகில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாக காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது.
செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை மணந்த சிவபெருமான் திருவேடீஸ்சுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீசுவரன் என பெயர் பெற்றார் .
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வேட்டகம் (மாமியார் வீடு) ஆன தலம்
இலக்குமி தாயார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயாரை கைபிடித்ததால், பார்த்தசாரதிக்கு இத்தலம் வேட்டகம் (மாமியார் வீடு) ஆனது, அதனால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.
மொகலாயர், ஆங்கிலேயர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோவில்
இக்கோவிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோவில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அமீர் மஹாலிலிருந்து வரும் அர்த்தசாம பூஜைப் பொருட்கள்
ஆற்காடு நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு, ஆற்காடு நவாப் பரம்பரையினர் மூலமாக, அவரகள் தற்போது வசித்து வரும் அமீர் மஹாலிலிருந்து, பால், புஷ்பம் இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
இராமநாதர் கோவில்
அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்
இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதிகம்.
இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.
இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.