விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அரிய காட்சி

திருத்தணி முருகன் சாயலில் அமைந்திருக்கும் மூலவர் திருமேனி

கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில், கடலூர் -திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு.

 அதிகமாக மலைத்தொடர்கள் இல்லாத கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று என்ற மலை தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோவில். விலங்கல் என்றால் மலை மற்றும் மலை சார்ந்த பகுதி என்று பொருள். 100 அடி உயரமுள்ள இந்த சிறிய குன்றின் மேலே ஏறுவதற்கு நூற்று பத்து படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.

 300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.  இப்படி அமைந்திருப்பது சிவபெருமான் வேறு, முருகன் வேறு என்று இல்லை, இருவரும் ஒருவரே என்ற ஐதீகத்தை உணர்த்துகின்றது. முருகனின் நெற்றியில் அமைந்திருக்கும் இந்த சிவலிங்கத்தை நாம் அபிஷேகத்தின் போது தெளிவாக பார்க்க முடியும்.

 பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி முருகன் தனக்கு திருத்தணியில் இருப்பது போல் இங்கு கோவில் கட்ட வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் இந்த கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவில் மூலவர் திருமேனியானது திருத்தணி முருகன் சாயலில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

 இக்கோவிலில் கல்லாலான வேல் ஒன்று ‘ஆதிவேல்’ என்ற பெயரில் தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த வேலுக்கு உப்பு, மிளகு, மஞ்சள், திருநீறு  ஆகியவற்றை.செலுத்தி பிரார்த்தனை செய்கிறார்கள். இப்படி செய்வதால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

 

கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு

Previous
Previous

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

Next
Next

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில்