தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில்
காதில் தோடாக ராகு - கேதுக்களை அணிந்திருக்கும் அம்மன்
ஆயிரம், ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் தேரில் வரும் அற்புதக் காட்சி
ஈரோட்டில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில். இக்கோவில் மிகவும் பழமையானது.
கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன், ருத்ர காளியாகத் தோன்றுகிறாள். தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு - கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது.
பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், இந்த அம்மன் திருமணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குகின்றாள்.
இந்த அம்மனின் தேர் திருவிழா இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி செல்வார்கள். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.
தகவல், படங்கள் உதவி : திரு. L. அண்ணாமலை, கோயம்புத்தூர்