வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்
திருநாள்ளாறு தலத்திற்கு இணையான தலம்
சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாதாள ஈஸ்வரி. சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.
இத்தலம் குணசீலத்துக்கு 2 கிலோ மீட்டர் முன்னால் இக்கோவில் அமைந்துள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதற்குரிய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானை ஏழரை நாழிகை நேரம் பிடிக்க முற்பட்ட போது, சனியிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் இந்த தலத்திற்கு வந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு பாதாள ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அதற்கு ஏற்றார்போல் இத்தலத்து மூலவரை தரிசிக்க, நாம் தரைமட்டத்தில் இருந்து பல படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். சிவபெருமானை பிடிக்க வந்த சனி பகவான் மூலவருக்கு எதிரில் இடதுபுறம் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
திருநள்ளாறுக்கு இணையான தலம்
ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி முதலிய சனி தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய பரிகாரத் தலம் இது. அதனால் இத்தலம் திருநள்ளாறுக்கு இணையான தலம் என்று போற்றப்படுகிறது.
சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்
சனிபகவனால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பெரிய இழப்பை சந்தித்தவர்கள், அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்பட்டஅந்த இழப்பிலிருந்து மீண்டு வரலாம்.
இந்த தலத்து இறைவனை தரிசனம் செய்த பிறகு படி ஏறி மேலே செல்லும் போது, நம்மை பீடித்திருந்த சனி தோஷம் முழுவதும் நிவர்த்தி ஆகி விலகுகின்றது. அதனால் நமது பிரச்சனைகள், கஷ்டங்கள் முதலியவை நீங்கி நமது வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த தலத்தில் சிவபெருமான் நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால், இத்தலத்தில் நவகிரகங்களுக்குத் தனிச் சன்னதி கிடையாது.