சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்

குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுக்கும் நடைமுறை

சென்னையின் வடக்கில் அமைந்துள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். மூலவர் பெருமாள் வடக்கு நோக்கி இருப்பது இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குலதெய்வமாக இப்பெருமாள் விளங்குகின்றார்.

தல புராணம்

அரசர்கள் காலத்தில், செல்வந்தர் ஒருவர், தான் கொடுத்த கடனுக்கு ஈடாக, அவர் வீட்டில் இருந்த பெருமாள் சிலையை, கட்டை வண்டியில் எடுத்து வந்து, தண்டையார்பேட்டை காட்டில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பின், மக்களால் கண்டெடுக்கப்பட்டு, அதே இடத்தில் சிறிய அளவிலான கோயிலை மக்கள் எழுப்பியதாக செவிவழி வரலாறு கூறுகிறது. பெருமாளை குல தெய்வமாக வழிபடும் மீனவ மக்கள், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், விரதம் இருந்து, தங்கள் வேண்டுதல்களை அவரது பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வழக்கம். பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. தங்கள் வாழ்வின் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு வரதராஜ பெருமாள் தரும் வரமே காரணமென்பது, இம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. வரதராஜ பெருமாள். வரம் தரும் ராஜன் என்பதால், அவர் வரதராஜ பெருமாள் ஆக இங்கு காட்சியளிக்கிறார்.  

பிரார்த்தனை

ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.

 இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர்.

ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர். பின் பெருமாளிடம் இருந்து குழந்தையை தத்தெடுக்கின்றனர்.

மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிழாக்கள்

ஒவ்வொரு வைகாசியிலும் இங்கு பிரம்மோற்சவம் நடக்கும். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு வாரமும், புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். 

Read More