
பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோவில்
சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி அமைந்துள்ள அபூர்வ தோற்றம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில்,10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் முன்குடுமீஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில் சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.
இப்படி சிவலிங்கத் திருமேனியில், குடுமி அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோவிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோவிலுக்கு எடுத்து வந்தார்.
சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் 'லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!' என பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.