படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

படவேடு சுப்பிரமணிய சுவாமி கோவில்

முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் சூட்டிய தலம்

முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக்  காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அமைந்துள்ள படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோவில் அருகே உள்ள குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. படை + வீடு = படைவீடு.  படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால், படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று, நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.

 முருகப்பெருமானுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய படைவீடு

படவேடு ரேணுகாதேவி ஆலயத்துக்கு எதிரேயுள்ள குன்றில் வந்தமர்ந்த முருகப்பெருமானுக்கு, அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய, தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான்.

 முருகப்பெருமான் மயில் மீது நின்றபடி இருக்கும் அபூர்வக்  காட்சி

குன்றின் மீது உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல 300 கருங்கல்லான படிகள் உள்ளன.  இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கிழக்கு பார்த்து எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அல்லது மயிலுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால், இக்கோவிலில் வடக்கு முகம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயில் மீது முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அபூர்வமான ஒன்றாகும். அந்த மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகும். இக்கோவில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் ஆகும். அவரது திருப்புகழ் பாடலில் இத்தலம் சோமீசர் கோயில் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இக்கோவில் சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவிலாகும். மேலும் நாகதோஷம் உடையவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது.

Read More
படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

படவேடு யோகராமசந்திர மூர்த்தி கோவில்

ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி இருக்கும் அரிய ராமர், சீதை சிலை

ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்யும் யோகராமர்

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே, நடந்துசெல்லும் தூரத்தில் உள்ள வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது யோகராமசந்திர மூர்த்தி கோவில். படவேடு ரேணுகாதேவி கோவில் இணைப்புக் கோவிலாக யோகராமசந்திர மூர்த்தி கோவில் இருக்கிறது.

வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோவில் இது.

இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில், மாணவனுக்கு பாடம் போதிக்கிற பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது.

சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்த நிலையில், பனை ஓலைகளை கொத்தாக கையில் பிடித்து, ஓலைச் சுவடியை படிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், ராமபிரான் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் எதுவும் இல்லை. ஆனால், இளையபெருமாளான லட்சுமணன் வில்லும் கையுமாக நிற்கிறார்.

யோகராமர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில்

லட்சுமி நரசிம்மரின் வித்தியாசமான தோற்றம்

காட்பாடியிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள சந்தவாசலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது படவேடு என்னும் கிராமம். தசாவதார பெருமாள்களில் ஒருவரான பரசுராமன் அவதரித்த தலம் இது. இந்த கிராமத்தில் ஓடும் கமண்டலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில்.இந்த மலைக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.

இக்கோவில் வெறும் மூலவர் சன்னதி மட்டும் கொண்ட சிறிய கோவில். பொதுவாக எல்லா லட்சுமி நரசிம்மர் கோவில்களிலும் லட்சுமி தேவி நரசிம்மரின் இடது தொடை மீது அமர்ந்து காட்சி தருவாள். இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரின் சிறப்பு என்னவென்றால், லட்சுமி தேவி, நரசிம்மரின் வலது பக்க மடிமீது அமர்ந்து காட்சி தருவது தான். லட்சுமி நரசிம்மரின் இந்த தோற்றத்தை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.

Read More