
நகர சூரக்குடி தேசிகநாதர் கோவில்
தலையில் கிரீடம் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனியே தோன்றும் வண்ணம் அமைந்த சிற்ப வடிவமைப்பு
காரைக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நகர சூரக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் தேசிகநாதர். இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி.
சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு 'சூரியக்குடி' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'சூரியக்குடி' என்ற பெயர் மருவி 'சூரக்குடி' என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் 'தேசிகநாதபுரம்' என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிறப்பாகும். இது நம் முன்னோர்களின் சிற்பக்கலை திறனையும், அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.