காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்

காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்

சிவபெருமான், ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவக்கிரக பதவி அளித்த தலம்

ராகு கேது தோஷ பரிகார தலம்

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது செவிலிமேடு கைலாசநாதர் கோவில். மூலவர் கைலாசநாதர் 16 பட்டை கொண்ட லிங்கத் திருமேனியுடன், சோடச லிங்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.

இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான், ராகு கேது நவக்கிரக பதவியை அடைந்தார்கள். தல புராணங்களின் படி பாற்கடலை கடைந்து அமுதத்தை அரக்கர்கள் கையில் கிடைக்காமல் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும்படி செய்தார். தேவர்களுக்கு அமுதத்தை சமமாக பிரித்து படைக்கும் சமயம் சுவர்ணபானு என்கிற அசுரன் அமிர்தம் சாப்பிடும் ஆசையில் தனது உருவத்தை தேவர் போல மாற்றிக்கொண்டு, தேவர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சூரிய, சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை வாங்கி பருகி விட்டான். இவன் அசுரன் என்பதை அறிந்த சூரிய சந்திரர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு சுவர்ணபானுவின் தலையை வெட்டினார். அமிர்தத்தை அவன் சாப்பிட்டதால் அவன் இறக்கவில்லை, மாறாக வெட்டுப்பட்ட தலைக்கு கீழ் பாம்பின் உடலும், தலையில்லா உடலின் கழுத்தில் ஐந்து தலை பாம்பு முகமும் தோன்றியது.

இந்த இரண்டும் ராகு – கேது எனப்பட்டனர். இந்த ராகு – கேது ஆகிய இருவரும் காஞ்சிபுரம் வந்தடைந்தனர். இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவனை வழிபட்டு தங்களின் செயலுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டனர். சிவனும் அவர்களை மன்னித்தருளி ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவகிரக பதவி தந்தருளினார்.

ராகு – கேது இருவராலும் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கம் இது என்பதால்,இக்கோவில் ராகு கேது தோஷ பரிகார தலமாக விளங்குகின்றது.ராகு – கேது தோஷம், பிதுர் சாபங்கள், களத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

Read More