
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சிம்ம யாளியின் வாயில் இருந்து தொங்கும் கல் சங்கிலி
நடுவில் தாமரை மலருடன் நுணுக்கமான வேலைப்பாடு உடைய ராசி சக்கரம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ளது 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். 'பொழில்வாய்ச்சி' (பொழில் வாய்ந்த ஊர் -மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது) என்ற பழமையான பெயர் கொண்ட இவ்வூர் 'முடிகொண்ட சோழநல்லூர்' என்று மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
இக்கோவில் ஒரு சிற்பக் கலை பொக்கிஷமாக விளங்குகின்றது. முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 துாண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்,தடாதகைப்பிராட்டியார், கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
சிவன் சந்நதிக்கு நேர் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை மலருடன், 12 ராசிகள் உருவ வடிவில் சதுரமான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. அதனையொட்டி, ஒரே கல்லில் சிம்ம யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து, கல் சங்கிலி தொங்குகின்றது. மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்
நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.
தடாதகைப் பிராட்டி
தடாதகைப் பிராட்டி (ஸ்ரீ மீனாட்சி) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், பழங்கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.
இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

மாசாணியம்மன் கோயில்
சயன கோலத்தில் உள்ள அம்மன்
பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள். இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் 'மயானசயனி' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'மாசாணி' என்றழைக்கப்படுகிறாள். மாசாணியம்மன் 17 அடி நீள திருமேனியுடன் கைகளில் கபாலம், உடுக்கை, சூலம்,சர்ப்பம் ஏந்தி மேலே நோக்கியபடி சயனித்திருக்கிறார்.