பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோவில்
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார தலம்
நரம்பு நோய் தீர்க்கும் ஆறு நாள் அர்ச்சனை
அம்பிகையின் கால் கொலுசொலி கேட்கும் தலம்
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் (மப்பேடு வழி), திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ள பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆதியில் இந்த ஈசனுக்கு குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர் என்பதுதான் திருநாமமாக விளங்கியது. அதுவே பின்னாளில் சுருங்கி சோழீஸ்வரர் என்று மாறியது என்கிறார்கள்.
இக்கோவிலானது நரம்பு சம்பந்தமான, வலிப்பு முதலிய நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவதைப் போன்ற அமைப்பைக் காணமுடியும். அதனால்தானோ என்னவோ இந்த ஈசனை வேண்டிக்கொண்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.
இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோவில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் .
சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோவிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார்.
அதிலிருந்து இக்கோவிலுக்கு நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
நரம்பு நோய் தீர்க்கும் ஆறு நாள் அர்ச்சனை
நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு வாரங்கள் திங்கள் கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுவாமிக்கு பால், விபூதி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். அந்த விபூதியையும் வில்வப் பொடியையும் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருவார்கள்.
விபூதியை இரவு உறங்குவதற்கு முன்பாக எங்கு வலியோ அங்கு நன்கு தடவிக் கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து இந்த சுவாமியின் திருநாமத்தை 108 முறை சொல்லவேண்டும்.
பிறகு விபூதி, வில்வப்பொடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழாவது திங்கள் கிழமை வந்து மகா அபிஷேகம் செய்து பரிகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்கள்.
அம்பிகையின் கால் கொலுசொலி கேட்கும் தலம்
இத்தலத்து அம்பிகை காமாட்சி அம்மன் பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரிபவள். அம்பிகையின் முன் அமர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அம்பிகையின் கால் கொலுசொலி கேட்குமாம்.
அம்பிகையின் திருப்பாதங்களில் கொலுசை அணிவிக்க ஏதுவாக அன்னையின் திருமேனி அமைந்துள்ளது சிறப்பாகும். அம்பிகையை வேண்டி நலம் பெற்றவர்கள் அம்பிகைக்குக் கொலுசு காணிக்கையாக வழங்குகின்றார்கள்.